Skip to main content

சட்டமன்ற தேர்தல் ! எடப்பாடியை வீழ்த்த நாடார் சமூக அமைப்புகள் திட்டம் !

Published on 16/01/2021 | Edited on 18/01/2021

 

nadar community plan to boycott eps

 

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாடார் சமூகத்தை வைத்து அரசியல் செய்யத் துவக்கியிருக்கிறார் தொழிலதிபர் வைகுண்டராஜன். ஆனால், என்ன மாதிரி அரசியல் செய்தாலும் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணிக்கும் திட்டத்தை நாடார்கள் மறந்துவிடவில்லை என்கின்றன நேர்மையான நாடார் சமூக அமைப்புகள் ! இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,  ’’தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் நாடார் சமூகமும் ஒன்று. ஆனால், நாடார் சமுகத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 5 வருடங்களாக எங்கள் சமூகத்தின் எந்த ஒரு கோரிக்கைகளுக்கும் அவர் செவி சாய்க்கவில்லை. குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் 3 நாடார்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான நாடார் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையில் தாருங்கள் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் அக்கறை காட்டவில்லை.

 

எடப்பாடி பழனிசாமியின் சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணரெட்டி விலகியபோதும், மணிகண்டன் நீக்கப்பட்ட போதும் காலியான அமைச்சரவை வாய்ப்பினை நாடார் சமூகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அதைப் பரிசீலிக்கக் கூட முன்வரவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

மரமேறும் நாடார்களை எம்.பி.சி. பட்டியலில் இணைப்பது, தென்மாவட்ட வளர்ச்சிக்கான ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடார் அமைப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது. ஆனால், எதற்குமே எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. இதுதவிர ,  நாடார் சமூகத்தினர்தான் சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகள் என ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் சொன்னார்கள். இதனை வழிமொழிந்து அங்கீகரிக்க எடப்பாடி மறுத்துவிட்டார். இப்படி நாடார்களின் நலன்களுக்காக அவர் எந்த துரும்பையும் அசைக்கவில்லை.

 

அதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க நாடார் சமூகம் தீர்மானித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் நாடார் விரோத அரசியலை எங்கள் சமூகத்தினர் மறந்துவிடவில்லை. எங்களின் கோபம் இந்த தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமி தொகுதியிலுள்ள நாடார்களே அவரைப் புறக்கணிப்பார்கள்.

 

இதனை உணர்ந்துள்ள வைகுண்டராஜன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாடார் சமூகத்தை ஒருங்கிணைக்கிறேன் என ஒரு கூட்டத்தை அண்மையில், சென்னையில் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில், நாடார் சமூகத்தின் வலிமையான அமைப்புகள் எதுவும் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பின்னால் நாடார் சமூகமும் இல்லை. தனது குடும்ப பிரச்சனைக்காக நாடார் சமூகத்தை மையப்படுத்தி தனது சுயநல அரசியலைச் செய்திருக்கிறார். செல்வாக்கு இல்லாத தனிநபரை நம்பி எடப்பாடி பழனிசாமி சென்றால், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் நாடார் சமூகத்தின் கோபம் இன்னும் அதிகரிக்கும் ‘’ என்கின்றனர் நம்மிடம்.

 

இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள நாடார் சமூகத்தின் மனநிலை குறித்து மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தன்னை சந்திக்கும் நிர்வாகிகள் பலரிடமும் எடப்பாடி பழனிசாமி விவாதித்திருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.