தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான எச். வசந்தகுமார் நேற்று (28/08/2020) மாலை சென்னையில் காலமானார்.

Advertisment

எச்.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தெலங்கானா ஆளுநர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டபல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

வசந்தகுமார் எம்.பி. உடல் சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்ஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள், வசந்த் அன் கோ நிறுவன ஊழியர்களும் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்தகுமாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து வசந்தகுமாரின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வசந்தகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, வசந்தகுமார் எம்.பி.யின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்களின்அஞ்சலிக்கு பிறகு, நாளை (30/08/2020) காலை 10.00 மணியளவில் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.