தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை செய்துவருகின்றன. திமுக, அதிமுக என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார்.
நேற்று கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டிவருகிறார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி, தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி. இணக்கமா இருந்து சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி.எஸ்.டி. கூட கிடைக்கல. காவேரி ஆணையம், கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டதுதான் மிச்சம்” என்று தெரிவித்துள்ளார்.