Skip to main content

'மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார்' - பாஜக துணை தலைவர் பேட்டி

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nn

 

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பாஜக துணைத் தலைவர் எஸ்.கனகசபாபதி நம்பிக்கை தெரிவித்தார்.

 

மோடி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, "எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசுகிறார். வெளிநாடுகளில் நமது நாட்டுக்கு எதிராகவே பேசுகிறார். பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கர்நாடகாவில் வெற்றி பெற்றார். அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது நீதிமன்றம் தான். அவரது பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறினார்கள். அது வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்களுக்கா அனைத்து பெண்களுக்கா என்று தெளிவுபடுத்தப்படவில்லை.

 

மாதந்தோறும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்றார்கள். இன்று யூனிட் கட்டணம் ரூபாய் 2.65 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அவரது வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தனிநபர் வருமானம், தேசிய மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது. கருப்பு பணம் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. பிரதமர் எங்கே சென்றாலும் தமிழை உயர்த்திப் பேசுகிறார். நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமையை உயர்த்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் போற்றப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காசி கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

 

உலகில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் 40% இந்தியாவில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உயர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என்கிறார். ஆனால் ஊழல் நிறைந்த திராவிட மாடல் ஆட்சியில் இருந்து நாங்கள் தமிழகத்தை காப்போம் என்கிறோம். சமீபத்தில் கூட 25 பேர் விஷச் சாராயம் அருந்தி இறந்துவிட்டனர். ஆனால் முதலமைச்சர் துறை அமைச்சரிடம் அதுபற்றி விளக்கம் கேட்கவில்லை. மாறாக துறை அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை கண்டிக்கிறார். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பெருகிவிட்டது. நேற்று முன்தினம் கூட விஷ்ணு பிரியா என்ற மாணவி தந்தையின் மது பழக்கத்தை கண்டித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா கிடைக்கிறது. சட்டவிரோத மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மேகதாது அணை திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.