Skip to main content

தோல்வி பயத்தால் மோடியின் ஸ்டார் அந்தஸ்தை பறித்தது பாஜக!

Published on 19/11/2018 | Edited on 12/12/2018

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவின் ஸ்டார் பிரச்சாரகர் என்ற அந்தஸ்த்தை மோடியிடம் இருந்து பாஜக பறித்திருக்கிறது.

 

 

ss

 

மோடி பிரச்சாரம் செய்தால் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த பாஜக, தனது ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தோல்வி பயம் காரணமாக மோடியின் கூட்டங்களை குறைத்திருக்கிறது.

 

கடந்த குஜராத் தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலத்தில் வெற்றியை தக்க வைக்க பொதுக்கூட்டங்களில் அழுதார். காங்கிரஸும் பாகிஸ்தானும் சேர்ந்து சதி செய்வதாக கூசாமல் பொய் பேசினார். அப்படி இருந்தும் பாஜகவின் வாக்குச் சதவீதம் குறைந்து, சட்டப்பேரவையிலும் குறைவான மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

 

ss

 

 

அதன்பின்னர் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் தொடர்ச்சியாக 23 பொதுக்கூட்டங்களில் பேசி பிரச்சாரம் செய்தும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் சிதறியிருந்த நிலையிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைய முடிவெடுத்துள்ளன.

 

இப்படிப்பட்ட நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்தாலும் வெற்றிபெற முடியாது என்று முடிவாகிவிட்டது. எனவே, இந்த மாநிலங்களில் மோடியை பிரச்சாரம் செய்ய வைத்து படுதோல்வியைச் சந்திக்க பாஜக விரும்பவில்லை. ஏனெனில் தேர்தல் நடைபெறவுள்ள மிஜோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. அதாவது, தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் பாஜக தோற்பது உறுதியாகிவிட்டதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவுக்குள்ளேயே குத்துவெட்டு தூள்பறக்கிறது. அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் மோடி பிரச்சாரம் செய்தும் தோற்றால் அவருடைய தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது கடினம் என்று பாஜக நினைக்கிறது. எனவே, இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்காக அமித் ஷாவும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத்தும் முக்கிய பிரச்சாரகர்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி கடைசி நாட்களில் மட்டும் சில கூட்டங்களில் பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இதே மூன்று மாநிலங்களில் மோடி பிரச்சாரம் செய்ததால்தான் பாஜக வெற்றி பெற்றதாக கூறி மோடியை பிரதமர் வேட்பாளராக்கி பிரச்சாரம் செய்தது பாஜக. ஆனால், இப்போது, மோடி பிரச்சாரம் செய்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தது மட்டுமல்ல, அந்த தோல்விக்கு மோடியை பொறுப்பாக்கவும் பாஜக தயாராக இல்லை.

 

எப்படி தந்திரம் செய்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்கப்போவது நிச்சயம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.