Skip to main content

இந்தியா முடக்கம்! மோடியின் அறிவிப்பு பின்னணியில் டாக்டர் ராமதாஸ்!  

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

கரோனா வைரஸைத் தடுப்பதற்காக இந்திய தேசத்தை 21 நாட்களுக்கு முழுமையாக முடக்கியிருக்கும் பிரதமர் மோடி, அனைத்து மாநில அரசுகளும் எந்தளவுக்கு தனது உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரங்களும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மோடிக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநில அரசின் உயரதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது பிரதமர் அலுவலகம். 
          

இந்த நிலையில், மோடியின் 21 நாள் நாடடங்கு உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாசின் யோசனையும் முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசோடு தொடர்பில் இருக்கும் தமிழக பாஜகவினர். 


  

ramadoss



கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் என சர்வதேச நாடுகளிலுள்ள வைரலாஜி துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் டாக்டர் என்கிற முறையில் அதன் விபரீதத்தை உணர்ந்திருந்தார் பாமக எம்.பி.யான டாக்டர் அன்புமணி. இது குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வந்த அன்புமணி, 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என்பதை வலியுறுத்தியபடியே இருந்தார். 


இதனையறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தொடர்புகொண்டு விவாதிக்க, அப்போது பிரதமரிடம் பேச விரும்புவதைத் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். இதனையடுத்து, பிரதமரிடம் கலந்துப்பேசிவிட்டுச் சொல்வதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஞாயிறு இரவு பிரதமரிடம் நீங்கள் பேசலாம் எனத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, மோடியிடம் பேச காத்திருந்தார் ராமதாஸ் (இதனை, மோடியிடம் பேச காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ் என்கிற தலைப்பில் நக்கீரன் இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம்). 

          

அதேபோல, ஞாயிறு இரவு 11 மணிக்குப் பிரதமர் மோடியிடம் பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட பாமக தலைவர்களில் ஒருவர், ‘’கரோனா தாக்குதலில் இந்தியா மிக மோசமான சூழலில் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பினரிடமிருந்தும் பல்வேறு மருத்துவ நிபுனர்களிடமிருந்தும் கிடைக்கும் தகவல்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. கரோனாவை ஒழிக்க மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத சூழலில் அதனைப் பரவாமல் தடுப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். நோய் பரவுகிற மூன்றவது நிலையில் இந்தியா தள்ளப்பட்டிருப்பதாகவும் உணர முடிகிறது. அதனால் குறைந்தபட்சம் 15 நாட்கள் முழுமையான ஊரடங்கை கொண்டு வாருங்கள். மக்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதுதான் ஒரே வழி.
                

உங்கள் வார்த்தைக்கு இந்திய மக்களிடம் மதிப்பு இருக்கிறது. அதனால் முழுமையான ஊரடங்கைக் கொண்டு வாருங்கள் எனப் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார் ராமதாஸ். ஏற்கனவே டெல்லியிலுள்ள எயிம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலுள்ள வைரலாஜி நிபுனர்களும் இதே கருத்தை பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அதனை டாக்டர் ராமதாஸிடம் பகிர்ந்துகொண்ட பிரதமர், இது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி எனச் சொல்லியுள்ளார். இந்தச் சூழலில்தான், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாள் இந்தியாவை முடக்கி வைக்கும் பிரகடனத்தை வெளிப்படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் டாக்டர் ராமதாசின் யோசனையும் ஒரு காரணமாக இருந்துள்ளது‘’ என்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.