sripriya

Advertisment

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் சமீபத்தில் நேரலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அதில், பேசும் போது "தியாகய்யர், ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதிகளில் இரந்து பாடியதைக்" குறிப்பிட்டுப் பேசினார். நடிகர் கமல் பேசிய இந்தக் கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரிகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசைப் பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்எச்.ராஜாவின் விமர்சனத்துக்கு நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கமல்ஹாசன் பேசிய கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு எச்.ராஜாவால் திரிக்கப்பட்டிருக்கிறது" என்றும்,"விடிந்தால் என்ன அர்த்தமற்ற செய்திகளைப் பதிவிடலாம் என்று தூக்கத்தைத் தொலைத்தபடி யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு... நீங்கள் வேண்டுமானால் தவறான செய்திகளைப் பரப்புங்கள்,உங்கள் பின்னால் ஒரு சிலர் தாளம் போட்டபடி வரலாம். என்னைப் போன்ற இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்று கொள்ளமாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.