Skip to main content

பாஜகவிற்கு படையெடுத்த எம்.எல்.ஏக்கள்; என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் காங்கிரஸ்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

MLAs who defected to BJP; Congress is at a loss as to what to do

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், பிஹாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் மணிப்பூரில் நிதிஷ்குமார் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிஷ்குமார் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியைத் தொடங்கி, மீண்டும் பாஜகவுடன் இணைந்தனர். 

 

கடந்த 2020ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலும் ஐக்கிய ஜனதாதள கட்சியிலிருந்து 6 பேர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்தை சந்தித்து பேசி பாஜகவில் இணைந்தனர். மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பாஜகவிற்கு 20 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்களும் இருந்தனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக மாறியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.