Skip to main content

“உற்சவர் ஜெயலலிதா; மூலவர் சசிகலா! என் இலட்சியம் என்ன தெரியுமா..?” ராஜவர்மன் ஆவேசம்

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

MLA Rajavarman who joined into ammk from admk addressed press


அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்துள்ள சாத்தூர் தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உழைத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம். கே.டி.ராஜேந்திரபாலாஜியுடைய அதிகாரத்தினால்தான், எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதியில் மீண்டும் நின்று ராஜேந்திர பாலாஜி வெற்றிபெற்றால், நான் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன். மாற்று கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் ராஜேந்திரபாலாஜி.

 

சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் ஆட்சியில் அமர்வார். ராஜேந்திரபாலாஜி ஏன் சிவகாசி தொகுதியில் இருந்து மாறி ராஜபாளையத்தில் நிற்கிறார் என்று அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும். மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, கழக நிர்வாகிகள் ஆதரவுடன்தான் அமமுகவில் இணைந்திருக்கிறேன். இதுதான் ஆரம்பம்,  நான்தான் முதலில் வந்திருக்கிறேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள்.  சின்னம்மாவிற்கு செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

 

ராஜேந்திரபாலாஜி, எந்தச் சமுதாய மக்களுக்கும் ஆதரவாக இருந்தது இல்லை. துணை முதல்வருக்கும், முதல்வருக்கும் எங்கள் மாவட்டத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தெரியும். இனி அதிமுக கட்சியைக் காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாது. கட்சியை அடகு வைத்து விளையாடி வருகின்றனர். ஜெயலலிதா உற்சவர்; மூலவர் சசிகலாதான். அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்லது செய்தவர் சசிகலா. நிறைய பேருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தவர். எப்படி சசிகலாவிடம், பொதுச்செயலாளராக வேண்டும் என்று கெஞ்சினார்களோ, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அது நடக்கும்.

 

சாத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். பொதுச்செயலாளர் உத்தரவு அளித்தால் போட்டியிடுவேன். கூடவே வைத்திருந்து கழுத்தறுத்தார்கள், தலைமை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் மந்திரிகளும் இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” என்று அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.