Skip to main content

“தங்கமும் மணியுமாக மின்ன வேண்டிய வாரியம்; ஈயமும், பித்தளையுமாக மாறிவிட்டது..”  எம்.எல்.ஏ. பரந்தாமன்

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

MLA Paranthaman speech about Electricity on assembly

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று சட்டத்துறை, மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் (திமுக) பேசியதாவது; “எழும்பூர் பெயர் பண்டைய கால கல்வெட்டுகளில் எழுமூர் என்றே உள்ளது. எனவே, எழுமூர் என்று பெயர் மாற்ற வேண்டும். எழும்பூர் ரயில் நிலையத்திற்குக் கலைஞர் பெயரைச் சூட்ட வேண்டும். வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது போல், தமிழக அரசும், சி.பி.ஐ. அமைப்பு விசாரணைக்கு வரும் போது மாநில அரசின் அனுமதியைப் பெற்றே விசாரணையைத் தொடங்க வேண்டும் எனப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 

 

கோவாவில் உள்ளது போல், சட்ட அகாடமியைத் தமிழகத்தில் தொடங்க வேண்டும். மாவட்ட, சார்பு, கீழமை நீதிமன்றங்களில் வக்கீல்களுக்கு என்று தனியாக அறை வேண்டும். வக்கீல்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். வக்கீல்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கு விருந்தினர் இல்லம் கட்டிக் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் 7 சட்டக் கல்லூரிகள் மிகுந்த அவசர கதியில் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய பார் கவுன்சில் அனுமதி பெறாமல் அவை தொடங்கப்பட்டுள்ளன. அதில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய தணிக்கை அறிக்கையில், கடந்த ஆட்சியில் தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மராட்டிய மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5க்கு வாங்கிய நிலையில், தமிழகம் மட்டும் ரூ.7 கொடுத்து வாங்கியது ஏன்?. தமிழ்நாடு மின்சார வாரியம் தங்கமும், மணியுமாக மின்ன வேண்டிய வாரியம், ஈயமும், பித்தளையுமாக மாறிவிட்டது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரியைக் காணவில்லை. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணமானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

 

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி; “எந்த அடிப்படையில் உறுப்பினர் இங்கே குற்றம்சாட்டிப் பேசுகிறார். அதற்கான ஆதாரத்தைக் காட்டி விட்டுப் பேச வேண்டும். கடந்த கால அரசைக் குற்றம் சொல்வதற்காக இவ்வாறு பேசுகிறார். நிலக்கரி குறித்து ஆய்வு செய்ய அப்போதே குழு அமைக்கப்பட்டதாக அத்துறையின் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஏற்கனவே கூறிவிட்டார்” என்றார்.

 

பரந்தாமன்; “ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார். 2013-2018ம் ஆண்டு மத்திய தணிக்கை அறிக்கையில் 34வது பக்கத்தை எடுத்துப் பாருங்கள். ஒரு யூனிட் கூட தயாரிக்க முயற்சிக்காமல் திட்டமிட்டு வாங்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது” என்றார். 

 

பி.தங்கமணி (அதிமுக); “கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே ஒரு யூனிட் மின்சாரம் ரூ.9, ரூ.13 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு வெளியான மத்திய தணிக்கை அறிக்கையில், மின் துறையில் தவறான நிர்வாகத்தால் ரூ.10,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

அமைச்சர் செந்தில்பாலாஜி; “மின் தேவை அதிகரிக்கும் போது, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வது வழக்கம் தான். ஆனால், கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்து நீண்ட காலத்திற்குக் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 15 ஆண்டுகள், 25 ஆண்டுகளுக்கு நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். சந்தையில் விலை குறையும் என்று தெரிந்தே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனால் தான், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த காலத்திற்குத்தான் கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது” என்றார்.


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சிக் காலத்திலும் 15 ஆண்டுகளுக்கு எனத் தனியாரிடம் இருந்து மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ.7.70, ரூ.8.30 விலையில் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது” என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்