MLA Arul boycotts Anbumani's 2nd day meeting conflict between ramadoss

Advertisment

பா.ம.க.வின் நிறுவனர்ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன் தினம்(29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அன்புமணியை 35 வயதில் அமைச்சராக்கியது தனது தவறு தான் என்றும், அவருக்கு தலைமை பண்பு இல்லை என்றும் தாய் மீது பாட்டிலை தூக்கி எறிந்தார் என்றும் என தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சோழிங்கநல்லூரில் அன்புமணி நேற்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் கே. பாலு உள்ளிட்டவர்களை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். அதனை தொடர்ந்து, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்ட அன்புமணி, நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதில், பெரும்பான்மை நிர்வாகிகள் அன்புமணி கூட்டத்திற்கு வந்ததோடு, அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், கட்சியை அன்புமணி முழுமையாக கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அன்புமணியும் ராமதாஸும் இருதுருவங்களாக மாறியிருக்கும் நிலையில், இன்று (31-05-25) இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் அன்புமணி ஆலோசனை நடத்தவுள்ளார். சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ அருள் இந்த கூட்டத்தை புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் ஆகியோர் சென்னையில் அன்புமணியை சந்தித்து தங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.முன்னதாக, தைலாபுரத்தில் ஆடிட்டர் சுப்புரத்தினத்தை சந்தித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.