Skip to main content

40, 50, 500 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெற்றி இல்லை என்று ஒத்துக் கொள்கிறீர்களா? மு.க.ஸ்டாலின் கேள்வி 

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன் எழுதிய “வாழ்வும் பணியும்” புத்தக வெளியீட்டுவிழா ஒரு தனியார் மண்டபத்தில் 05.09.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் மு.கண்ணப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், அண்மையில் வேலூர் தொகுதியில் நாம் பெற்ற வெற்றி என்பதுகூட அது வெற்றி இல்லையாம்! தோல்வி அடைந்தவர்கள் தோல்வி பெறவில்லையாம்!!
 

அதற்கு என்ன காரணம் சொல்கின்றார்கள் என்றால், இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் ஏற்கனவே, நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஆனால், ஏறக்குறையா 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள், என்கின்றார்கள்!
 

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் வெற்றி வெற்றிதான். அதையாரும் மாற்ற முடியாது.
 

நான் இன்னும் கேட்கின்றேன் புதுவையை சேர்த்து 40 தொகுதிகளில், 39 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம். எனவே, 40க்கு 1 பெரியதா? 40க்கு 39 பெரியதா?
 

இந்த சராசரி அறிவுகூட இன்றைக்கு ஒரு சிலருக்கு இல்லையே என்ற அந்த வருத்தம்தான், இன்றைக்கு நம்மை கேள்வி கேட்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

 

mkstalin


 

தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜ.க.,வும் மாநிலத்தில் இருக்கும் அ.தி.மு.க.,வும் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கிறார்கள்.
 

எனவே, ஆளும் கட்சிகள் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து, இந்தக் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், அது உள்ளபடியே ஒரு மிகப்பெரிய வெற்றி! அதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.


 

8,000 வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிப் பெற்றாலும் அது மிகப்பெரிய வெற்றி தான்!
 

நான் இன்னமும் சொல்கின்றேன்,அது வெற்றி அல்ல - வெற்றி அல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் 2016-ல் 1.1 சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் தான் ஆட்சிப்பொறுப்பிற்கு நீங்கள் வந்தீர்கள்.
 

எனவே, 1.1 சதவிகிதம் வித்தியாசம் தானே என்று, 'நாங்கள் ஆட்சியில் இருக்க மாட்டோம்', என்று சொல்லி ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றீர்களா? ஆட்சியில் தானே இருக்கின்றீர்கள்!
 

நாங்கள் அதை மறுக்க வில்லையே.

 

mafa pandiarajan


 

இன்னமும் சொல்கின்றேன். ஏறக்குறைய 20 இடங்களில் இன்றைக்கு சிலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பாண்டியராஜனாக இருந்தாலும், துரைக்கண்ணுவாக இருந்தாலும், கோவில்பட்டி தொகுதியாக இருந்தாலும், இராதாபுரம் தொகுதியாக இருந்தாலும், 40 ஓட்டு, 50 ஓட்டு, 500 ஓட்டு, 2000 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று அமைச்சர்களே இன்றைக்கு இருக்கின்றீர்கள். 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெற்றி இல்லை என்றால், 40 - 50 - 500 - 2000 போன்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எல்லாம் வெற்றி இல்லை என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

 

duraikannu


 

அப்படி ஒத்துக் கொண்டால் ஆட்சியிலேயே நீங்கள் இருக்கக்கூடாது. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.
 

எனவே, நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது, உள்ளபடியே என்னைப் பொறுத்தவரையில் நாம் ஆட்சிக்கு வராமல் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை தான் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. இடைத்தேர்தல் நடைபெற்றது, அதில் முழுமையாக நாம் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சிக்கு வந்திருப்போம். ஆனால் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன நிலை என்று தெரியுமா?


 

இப்போது என்ன நடக்கிறதோ அதை தான் நாமும் செய்யவேண்டும். அப்படி நாமும் செய்கிறபோது அடுத்த முறை தேர்தலில் பிரச்சாரத்திற்கு மக்களிடத்தில் செல்ல முடியாது. எந்த திட்டங்களையும் முறையாக நாம் செய்ய முடியாது. எனவே முறையாக தேர்தல் வருகிறபோது, அதில் பெரும்பான்மையை விட இன்னும் அதிகமான அளவிற்கு,
 

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் 1971ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்தோமோ, அதேபோல், 184 அல்ல, 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றிப் பெற்று நாம் ஆட்சிக்கு வருகின்றபோது இன்னும் 25 வருடத்திற்கு இந்த தி.மு.கழக ஆட்சியை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்ற அந்த நிலையில் நாம் ஆட்சி நடத்துவோம். இவ்வாறு பேசினார்.


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.