Skip to main content

"ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறுவதில் உண்மையில்லை" - முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

mk stalin explanation on attack on governor convoy

 

தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று சட்டசபையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அதிமுக, பின்னர் வெளிநடப்பும் செய்தது. இந்த நிலையில், ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.

 

இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், "ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளைத்தான் வீசி எறிந்தார்கள் என்பதை காவல்துறை கூடுதல் இயக்குநர் மிக விளக்கமாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்