Skip to main content

உயிரை பாதுகாக்க ஒரே ஒரு தடி இருந்தது. அதனை எடப்பாடியும், நானும் வைத்துக்கொண்டு... தங்கமணி பேச்சு...

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். 
 

அப்போது, இரண்டு வெற்றிக்குப் பிறகு இந்தக் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் அதிமுக என்பதை உறுதி செய்து அதற்கு பிறகு நடக்கும் கூட்டம். ஒரு வாரம்தான், ஒரு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்று சொல்லி வந்தார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பின்னர் நடக்கும் கூட்டம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். 2021லும் அதிமுக ஆட்சி என்பதை அந்த வெற்றி சொல்கிறது. 

 

minister


 

ஏதோ ஒரு அதிசயத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த இயக்கத்திற்காக அவர் உழைத்த உழைப்பு என்ன என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பூத்தை ஒதுக்கியிருந்தார் ஜெயலலிதா. இருவரும் ஒன்றாகத்தான் தேர்தல் பணியாற்றினோம். மேலஉரப்பனூர், கீழ்உரப்பனூர், ஊராண்ட உருப்பனூர் பகுதிகளை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் 20 நாட்கள் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறை எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணிகளை பார்த்தோம். 
 

அந்த அறையில் பாய்தான் இருக்கும். அந்த பாயில்தான் படுப்போம். பத்து நாள் இருக்கும், திடீரென இரவு இரண்டு மணி இருக்கும், திமுககாரர்கள் சத்தம்போட்டுக் கொண்டு மேலே வருவதை பார்த்த எடப்பாடியார், மணி நாம் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் நாங்கள் தவழ்ந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தோம். 10 பேர் வந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பது ஒரே அறை, ஒரே கேட்டுதான் இருக்கிறது. தங்களை பாதுகாக்க என்ன இருக்கிறது என்றால் அந்த அறையில் ஒரே ஒரு தடிதான் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். விடிய விடிய உயிரை பணயம் வைத்து அன்றைய தினம் தேர்தல் பணியாற்றியவர்தான் எடப்பாடியார். 


 

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பு இருக்குமா. தொண்டர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாம் வேட்டியை தைரியமாக கட்டி செல்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும்தான். 


 

திடீரென முதலமைச்சரானார். அதிசயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் எதிரி, இன்னொரு புறம் துரோகி என்பதை சமாளித்து அதற்கு மேலாக இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்கள் அதிகமாக நடந்தன. அனைத்தையும் நிர்வாகத் திறமை, ஆளுமை திறமை காரணமாக முறியடித்து காட்டியுள்ளார் எடப்பாடியார். இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.