Minister thangam thennarasu issues barrage of questions to Edappadi Palaniswami

சென்னையை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அதன்படி இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வராததால் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தேவதர்ஷினி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இத்தககைய சூழலில் தான் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தேவதர்ஷினி அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவிற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?.

Advertisment

மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?. தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?. மாணவி தர்ஷினி மரணத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மாணவர்களை ஏமாற்றாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பதிவை குறிப்பிட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

Minister thangam thennarasu issues barrage of questions to Edappadi Palaniswami

Advertisment

அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருந்தார். டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்று கூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?” சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.