Skip to main content

“எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் பா.ஜ.க ஆட்சிக்கு வர முடியாது” - அமைச்சர் சேகர்பாபு

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 Minister Sekarbabu says BJP cannot come to power no matter how many small tricks are played

 

அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.  

 

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும்.  

 

சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு நேற்று (08-11-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒருசேர இருக்கும் நாடு, இந்த நாடு. இந்த நாட்டில் பெரியார் கொள்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர ஆட்சி அதிகாரத்தில் வர முடியாது.

 

மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண வேண்டும் என்று துடிப்பவர்களால், இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து என்று அறைகூவல் இடுகிறார்கள். அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதன் பிறகு சித்தப்பாவா? என்பதை முடிவு செய்யலாம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்புவதாக இல்லை'-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

'Modi's role is over, people don't believe what they don't' - Minister Shekar Babu in an interview

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

அதேபோல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறது. நாட்டு மக்கள் உண்மை நிலையை அறிந்ததால் தான் தொடர்ந்து பாஜகவிற்கு தமிழகத்தில் தோல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி.

கச்சதீவை பொறுத்த அளவில் அன்றைய முதல்வர் கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கிற சூழல் வருகின்ற பொழுது அது குறித்து முதன் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்த  கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமல்லாமல் கச்சத்தீவு பறிபோய் போய்விடக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மத்திய அரசுக்கு இந்த கச்சத்தீவை ஒப்படைக்க கூடாது என முதன் முதலில் குரல் எழுப்பியவர் கலைஞர். ஆகவே மோடி உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி, தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை'' என்றார்.

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.