Skip to main content

பவன் கல்யாணுக்கு சவால் விடுத்த அமைச்சர் ரோஜா

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Minister Roja challenged Pawan Kalyan

 

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இதனையடுத்து, நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண், ஆந்திரா சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதன் அடிப்படையில் இவர் கடந்த இரண்டு வாரங்களாக ‘வாராகி யாத்திரா’ என்ற பெயரில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல இடங்களுக்குச் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது பொதுக் கூட்டங்களுக்கு அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பின்னுக்குத் தள்ளி பவன் கல்யாண் முன்னிலை பெற வாய்ப்பு அதிகளவு உள்ளதாக பவன் கல்யாண் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Minister Roja challenged Pawan Kalyan

 

இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியிருக்கிறார். அதில் அவர், “பவன் கல்யாண் ஒரு நடிகர். நடிகர் என்ற ரீதியில் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருகிறது. இந்த கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறிவிடும் என்று பவன் கல்யாண் நினைத்துவிடக்கூடாது. நானும் தான் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். எனக்கும் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. வேண்டுமென்றால் ஒரு சவால் விடுகிறேன். ஏதாவது ஒரு ஊரில் தனித்தனியாக கூட்டம் நடத்தலாம். நானும் வருகிறேன். பவன் கல்யாணும் வரட்டும். யாரை பார்க்க அதிகளவு ரசிகர்கள் வருகிறார்கள் என்பதை பார்த்து விடலாம். அவரை விட எனக்குத் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னைத் தாக்க முயற்சி நடக்கிறது” - ஆந்திராவை அலற வைத்த பவன் கல்யாண்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Pawan Kalyan allegation on andhra ruling party

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. 

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. 

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. 

இந்த நிலையில், ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னைத் தாக்க முயற்சி நடப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “என்னை சந்திக்க மக்கள் அதிக அளவில் வரும் போதல்லாம், என்னை தாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஒரு சிலர் பிளேடுகளுடன் கூட்டத்திற்குள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து பிடிப்பதே எனது பாதுகாப்பு டீமிற்கு முக்கிய வேலையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 200 உறுப்பினர்களை அழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வேன். அப்போது, உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும். அதே நேரம், பெரிய கூட்டங்களின் போது, என்னை தாக்க வேண்டும் என்பதற்காக சிலர் அடியாட்களை அமர்த்துகிறார்கள். அவர்கள்  தங்கள் கைகளில் பிளேடுகளை எடுத்து வந்து என்னை தாக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட இதுபோன்ற நிகழ்வு நடந்தது” என்று தெரிவித்தார். பவன் கல்யாணின் இந்த குற்றச்சாட்டு ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டீசர் சர்ச்சை; பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Pawan Kalyan's film crew Election Commission notice

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. 

அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார். 

இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில், ஒரு காட்சியில் ‘டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணி ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.