Skip to main content

"கடப்பாரையை வளைத்து கபாலியை அடித்த எம்.ஜி.ஆர்" - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #1 

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையோ? சோதனையோ? வேதனையோ? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும், தென்மாவட்டங்களில் தொகுதி தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, அங்கங்கே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அமைச்சர்கள் சைக்கிள் ஓட்டியதையே, இமாலய சாதனை என்று மார் தட்டினார்கள். இன்னும்கூட நிறையப் பேசினார்கள். அமைச்சர்கள் நிகழ்த்திய உரையில் ஒரு சில துளிகளை இங்கே உதிர்த்திருக்கிறோம்.

 

admk cycle rally



முதலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி...

கடப்பாரையை வளைத்தார் எம்.ஜி.ஆர்.!

அப்போது, தலைமைக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் வரும்போது, கடப்பாரையால் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்டார். திமுக கருங்காலி கபாலியால். அந்தக் கடப்பாரையைப் பிடித்து, கடப்பாரையை வளைத்தவர் எம்.ஜி.ஆர். பிறகு, கபாலியை அடித்து நொறுக்கி, தலைமைக் கழகம் சென்று கட்சி நடத்தியவர் எம்.ஜி.ஆர்.

மக்கள் தலை மேல் ஏறுபவனே எம்.ஜி.ஆர். தொண்டன்!

நாங்க என்றைக்குமே, வரிசையில் நின்று சினிமா பார்த்தது கிடையாது. தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்ததே கிடையாது. பத்து, இருபது பேர் போவோம். மக்கள் எல்லாரும் வரிசையில் நிற்பாங்க. அவங்க தலை மேல ஏறி,  தவழ்ந்துக்கிட்டே போயி, கவுன்டர்ல போயி கையை நீட்டுவோம். அவன்தான் எம்.ஜி.ஆர். தொண்டன். டிக்கெட் எடுத்து உள்ள போயி படம் பார்ப்போம். புரட்சித்தலைவர் நடித்த படத்தைக் காணவந்த கலைக்கண்களுக்கு நன்றின்னு போஸ்டர் ஒட்டுவோம். இதை ஏன் சொல்லுறேன் தெரியுமா? இன்னைக்கு சைக்கிள் பேரணி தொடங்கினோம் பார்த்தீங்களா? நான் சைக்கிள்ல வந்துக்கிட்டிருக்கும்போதே, என்னுடைய நினைவுகளெல்லாம் பின்னோக்கிப் போயிருச்சு.

 

rajendra balaji



எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை!

எம்.ஜி.ஆர். காலத்துல அண்ணன் ராதாகிருஷ்ணன் சேர்மனுக்கு 1986-ல் போட்டியிட்டபோது, பிரச்சாரம் நிறைவு நாளன்று சைக்கிள் பேரணி. ராதாகிருஷ்ணன் ஆலமரத்துப்பட்டி வரையிலும் சைக்கிளோட போயிட்டாரு. நான் கடைசி வரைக்கும் சைக்கிள் மிதிச்சேன். நல்ல சாப்பாடெல்லாம் போட மாட்டாங்க. எங்கேயாவது புளியோதரை வச்சிருப்பாங்க. தட்டுல கொடுப்பாங்க. சாப்பிட்டுட்டு சைக்கிளை மிதிப்போம். வெறித்தனம்.. எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்று, பாசம். தீயசக்தியை அழிக்கணும்கிற அந்த வெறித்தனம் இன்னைக்கும் இருக்கு. அதன் வெளிப்பாடுதான் இந்த சைக்கிள் பேரணி. அதிமுக ஒண்ணும் அழியல. பணக்காரர்களை  நம்பி எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பிக்கல. அதிமுக அழியவில்லை, ஒழியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அம்மா பேரவையோட சைக்கிள் பேரணி. தலைவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இங்கு பிறக்கின்ற இளைஞர்களெல்லாம் எம்.ஜி.ஆர். வாழ்க, அம்மா வாழ்க என்று சொல்லி வந்துகொண்டிருக்கிறார்கள். 30 வயதுக்கு கீழ் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இளைஞர்கள், இளஞ்சிங்கங்கள் சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

 

சில பேர் சொல்வார்கள்.. அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள் எல்லாரும் இறந்துவிட்டார்கள். இந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டதென்று. இல்லியே? இங்கே அமர்ந்திருக்கின்ற, சைக்கிள் பேரணியில் வந்த இளைஞர்களெல்லாம், எம்.ஜி.ஆரை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் நடித்த படத்தைப் பார்த்திருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கும் பிள்ளை இல்லை. ஜெயலலிதாவுக்கும் பிள்ளை இல்லை. தொல்லை இல்லை. கருணாநிதிக்கு பிள்ளை உண்டு. தொல்லை உண்டு. கருணாநிதி செத்ததுக்கு திமுககாரன் யாரும் கவலைப்படல. அழல.  சமாதிக்கு இடம் கொடுத்துட்டாங்களாம் கோர்ட்ல. இடம் கிடைச்சதுக்கு வெடி போடறாங்க.

 

ministers riding cycles



ஜாதகம் அதிமுகவுக்கு சாதகம்!

ஸ்டாலினோட ராசியைப் பார்த்தோமே. அவரு முதலமைச்சர் ஆகவே முடியாது.  எடப்பாடி அண்ணன் ஜாதகம் வலுவா இருக்கு. கட்டம் சரியா இருக்கு.  ராசிநாதன் வந்து வலுவா உட்கார்ந்திருக்கான். சனி உச்சத்துல இருக்கு. குரு பார்வையில இருக்கு. ஒண்ணுமே செய்ய முடியாது. எல்லாரு ஜாதகத்தையும் நாங்க பார்த்தாச்சு.

அமைச்சர்கள் சிந்திய ரத்தம்!

இன்றைக்கு சைக்கிள் பயணத்துல, ஐந்தாறு மாவட்டங்களில் தொடர்ந்து வர்றாரு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார். சைக்கிள் வந்து முன்னாடி ஓட்டும்போது தெரியாது. அப்ப சைக்கிள் மட்டும்தான் இருந்துச்சு. இப்ப எவ்வளவோ வண்டி வந்திருச்சு. டூ வீலர் வந்திருச்சு. கார் வந்திருச்சு. எவ்வளவோ சொகுசு வாழ்க்கை வந்திருச்சு. பழையபடி சைக்கிள்ல போகணும்னு ஏன் நினைச்சாருன்னா, அதிமுக தொண்டர்கள் நாங்க லட்சியவாதிகள். எதையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள். நாங்க நடந்து, பாதயாத்திரையாகக் கூட சாதனையைச் சொல்வோம். சைக்கிளில் வந்தும் சாதனையைச் சொல்வோம். எங்களுக்கு அந்த வலிமை, வல்லமை பேரவை நிர்வாகிகளுக்கு, அதிமுக தொண்டர்களுக்கு இருக்கு என்பதைக் காட்டுவதற்குத்தான் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சைக்கிள் பேரணி நடத்துகிறோம்.

 

 


சகோதரர் ஆர்.பி. உதயகுமார் ஒரு போராளியாகத் திகழக்கூடியவர். நான் டவுணுக்குள்ளதான், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்ல அவுட்டர்ல இருந்து அவுட்டர் சைக்கிள் மிதிச்சு வந்தேன். இங்கே சிவகாசியிலும். அவர் அப்படி இல்ல. தொடர்ந்து மிதிச்சு வர்றாரு. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஒரு அமைச்சர், அமைச்சர்களாக இருப்பவர்கள், சைக்கிள் மிதித்து வருவது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். திமுககாரன் கார் கண்ணாடியைக்கூட இறக்கிவிட மாட்டான். திமுக அமைச்சர்கள் கண்ணாடியை இறக்கிவிட மாட்டாங்க. டபுள் ஏ.ஸிய போட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.  நாங்க வியர்க்க வியர்க்க, ரத்தம் சிந்தி மக்களுக்கு உழைக்க வேண்டும்; பாடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் நாங்க. 

பத்து மந்திரி பேரம்!

இப்ப எங்களோட லட்சியம் என்ன தெரியுமா? டெல்லிதான்! டெல்லில அதிமுக ஆதரவு கொடுத்த கட்சிதான், இனிமேல் ஆட்சியமைக்க முடியும். அதிமுக ஆதரவு இல்லாம, டெல்லில யாரும் ஆட்சியமைக்க முடியாது. இனி அதிமுக இப்படியெல்லாம் வெற்று ஆதரவு கொடுக்காது. மத்தியில் பத்து மந்திரி கொடுன்னு கேட்போம். சும்மா வெற்று ஆதரவு ஜெயலலிதா கொடுத்தாங்கன்னா, அவங்க வந்து பெரிய மனுஷத்தன்மையில கொடுத்தாங்க. நம்மள்லாம் அப்படி கொடுக்க முடியாது. பத்து மந்திரி கொடு. நான் வந்து விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு மந்திரி கொடுன்னு கட்டாயம் கேட்பேன். நம்ம யாருக்கோ ஒட்டு போட்டு, யாருக்கோ ஆதரவு கொடுத்து, இவங்க கேட்பாங்க. கேட்கிறவங்களுக்கு நாம ஓட்டு போடணும். நீ இங்கிட்டு ஒரு காலை வைப்ப. அங்கிட்டு ஒரு காலை வைப்ப. ஒரே பேச்சு. நீ எங்கள நம்பு. உனக்கு ஆதரவு கொடுக்கிறோம். இல்ல, அவன நம்பு. முன் வாசல்ல அவன பார்க்கிற. பின் வாசல்ல எங்கள பார்க்கிற. இந்த வேலைய எல்லாம் எங்ககிட்ட வைக்காத.”

இதைப் பார்த்தே ஆச்சரியப்பட வேண்டாம். இதை விட வீரமாகப் பேசிய  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வைர வரிகள்  கீழே...  

புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், புலியை எதிர்ப்போம்! - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #2

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.