Advertisment

Minister Raghupathi criticizes edappadi pazhaniswamy

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியை அக்கும்பல் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ‘திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வே.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை’ எனத் தெரிவித்தார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, “பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருண்டுவிடும் என்று சொல்வார்கள். அது போல், எடப்பாடி பழனிசாமிக்கு எதை பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று சொல்வதே பழக்கமாக போய்விட்டது. அவர் காலையில் தூங்கி எழுந்தாலே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூச்சலிடுவது, முழக்கமிடுவது தான் அவருடைய நித்திய பணியாக இருக்கிறது” என்று கூறினார்.