
ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது; கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்காக கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் போய் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, ’’பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’’ என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வீடு.
பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ‘’ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது எப்படிடா? நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இவ்வளவு பெரிய பொய் சொல்லுற’’ என்று செந்திலை பார்த்து கவுண்டமணி சொல்லும் காமெடி போல இருக்கிறது.
பாஜகவைப் பார்த்து கோரிக்கை வைக்கவே பழனிசாமிக்கு துப்பில்லை; வக்கில்லை; மானமில்லை. இவர் ‘தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பதுதான் பாசிச பாஜகவின் சதித் திட்டம். இந்தச் சதியை நாட்டிலேயே முதன்முதலாக அம்பலப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான். தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர்; தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்னையில் அழைத்து கூட்டம் போட்டது திராவிட மாடல் அரசு; அந்த பிரச்னைக்காக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள் திமுக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இப்படி எதாவது ஒரு வகையில் தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அதிமுக பதிவு செய்திருக்கிறதா? அதனைக் கேள்வி கேட்டால், ’அமித்ஷாவிடம் பேசினேன். ஒன்றிய அரசிடம் குரல் கொடுத்தேன்’ என கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி. பாஜகவின் பாசிசத் திட்டத்தை முதலமைச்சர் அம்பலப்படுத்தியவுடன் அவர்களைக் காப்பாற்றப் புரளி நாடகத்தைக் காட்ட வந்துவிட்டார் கோழைசாமி. இந்தித் திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு அதை எதிர்ப்பேன் என்கிறாரே பழனிசாமி இதுதானே உலக மகா உருட்டு.
மாநிலங்களை ஒழித்துக்கட்டி நாட்டின் கூட்டாட்சி ஏற்பாட்டைச் சிதைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் சதித்திட்டம் அதற்கு ஒரு வழியாகத்தான் தொகுதி மறுசீரமைப்பை பாஜக பயன்படுத்த இருக்கிறது என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும், சின்னப் புத்தி கொண்ட பழனிசாமிக்குத்தான் தெரியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு செயல்படும் பழனிசாமி தனது டெல்லிப் பண்ணையார்களின் மனதைக் குளிர்விப்பதற்காக உதிர்க்கும் உளரல்களால் தான் ஒரு சிறந்த அடிமை என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து விட்டு, வெளியே வந்து ஒன்றிய பாஜக அரசைத் தாஜா செய்வதற்காக ஜெயக்குமார் பேட்டி கொடுத்த டபுள் ரோல் கட்சிதானே அதிமுக. அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளே ஒன்று பேசுவதும், வெளியே பாஜகவின் மனம் நோகாமல் பேசுவதும் என இரட்டை வேடம் போட்டவர்தானே பழனிசாமி.
உறுதியாக… அறுதியாக… தாய் மீது ஆணையாக… ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்றெல்லாம் சிலகாலம் வரை சொல்லி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து கடைசியில் கழுத்தறுத்துவிட்டு அமித்ஷா காலில் விழுந்த கோழை பழனிசாமி பேசுகிறார். ’தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று. பாஜக கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்டவர். தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொன்னால் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்ற பழ(னிசாமி)மொழி தான் நினைவுக்கு வருகிறது.
பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே U-Turn அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.