Skip to main content

எதுவும் தெரியாமல் அறிக்கை விடலாமா? - இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பன்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

Minister Periyakaruppan has been critic edappadi pazhanisamy

 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு வழங்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடக் குறைவாக அதிகாரிகளும், இடைத்தரகர்களும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், உங்கள் ஆட்சியில் கரும்பு விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா? என எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடியுள்ளார்  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல், கழக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்று கரும்பு கொள்முதல் பற்றி உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து நான்கு பொங்கல் விழாக்களைக் கொண்டாடி இருக்கிறார். அப்போது கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும் அவற்றின் சாராம்சத்தையாவது தெரிந்துகொண்டோ தற்போது அறிக்கை வெளியிடுவதற்கு முன் நம் அரசு வெளியிட்ட அரசாணையையாவது படித்திருந்தோ அல்லது படித்தவர்களிடம் தெரிந்துகொண்டோ இருந்திருக்கலாம்.

 

எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முன்னாள் முதல்வருக்கும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதல்வராயிருந்த 2021 பொங்கலுக்கு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் தொகை  (வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, போக்குவரத்துச் செலவு உட்பட) ரூ.30/- வழங்க ஆணையிடப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா?

 

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்ற முழு நீளக் கரும்பிற்கு அரசால் ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்த ஒரு கரும்பின் கொள்முதல் விலையான ரூ.30-ஐ விட 10% அதிகமாகும். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு நீளக் கரும்பிற்கும் அரசால் ரூ.33/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு வழங்கும் தொகையுடன் வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை சேர்ந்ததாகும்.

 

கரும்பு கொள்முதலுக்கு என்றுமில்லாத அளவிற்கு ‘எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்ற முறையில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும்.’ என்பது உள்ளிட்ட தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

கரும்பு விவசாயிகள் மனங்குளிர்ந்து முதல்வரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாராட்டைப் பொறுத்துக் கொள்ளாமல் ஆதாரமின்றி அறிக்கை விடுவதற்குப் பதில் சேலத்தில் உள்ள கரும்பு விவசாயிகளிடமாவது உண்மை நிலையைக் கேட்டறிந்து தெளிவு பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.