Skip to main content

முழு டைனோசரையே விழுங்கி ஏப்பம் விட கே.டி.ராஜேந்திர பாலாஜி முயற்சி! பால் முகவர்கள் சங்கம்

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

ktr

 

'ஆவின்' முறைகேடு, மோசடி விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உண்மை எனும் டைனோசரை விழுங்க முயற்சி செய்திருக்கிறார் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினைச் சுரண்டி அழிக்கும் முயற்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆவின் ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது அதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தொடர்பான முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பினோம். அதன் காரணமாக மதுரை மாவட்ட ஆவின் பால் மொத்த குளிர்விப்பான்கள் நிலையங்களிலும் (BMC), குளிரூட்டும் நிலையங்களிலும் (MCC) தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் என இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எங்களது சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அதே நேரம் இந்த ஆய்வுகள் மதுரை மாவட்டத்தில் மட்டும் நடைபெற்று வருவதும், இதர மாவட்டங்களில் உள்ள ஆவின் ஒன்றியங்களுக்குச் சென்று ஆய்வுகள் நடத்தாமல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்குழு அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

 

ஏனெனில் தற்போது மதுரை மாவட்டத்தில் ஆவின் ஒன்றியத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்குழுவின் தலைவரான திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்கனவே சென்னையில் பணியாற்றிய காலத்தில் தனக்குச் சாதகமான தனியார் பால் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பிற தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆவினுக்கு பாதகமாகவும் நடந்து கொண்டதாக அவர் மீது எண்ணற்ற புகார்கள் வந்ததின் அடிப்படையில் அப்பொழுது பால்வளத்துறை செயலாளராக இருந்த திரு. ககன்தீப்சிங்பேடி அவர்களும், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுனில்பாலிவால் அவர்களும் அலெக்ஸ் மீது நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவராவார். 

 

மேலும் தற்போது ஆவின் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட ஏற்கனவே ஆவினுக்குப் பாதகமாக நடந்து கொண்ட அலெக்ஸ் தலைமையில் ஆய்வுகள் நடத்திட குழு அமைத்திருப்பது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்ததைப் போன்றிருக்கிறது. 

 

எனவே அலெக்ஸ் தலைமையிலான குழுவைக் கலைத்துவிட்டு ஆவின் தொடர்பில் இல்லாத நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய "அதிரடி பறக்கும் படை" அமைத்து, தமிழகத்தில் உள்ள 25ஒன்றியங்களிலும் சோதனைகள் நடத்திட முடுக்கிவிட வேண்டும்.

 

அப்போது தான் ஆவினில் நடைபெற்று வரும் புரையோடிப் போன முறைகேடுகள், மோசடிகள் அடையாளம் காணப்பட்டு ஆவினும், ஆவினை நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் நலனும் காப்பாற்றப்படும் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

மேலும் ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில்  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அப்படி எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆனால் பால் முகவர் எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதாக பதிலளித்து உண்மையைக் குழி தோண்டி புதைக்க மட்டுமல்ல ஒரு முழு டைனோசரையே விழுங்கி ஏப்பம் விட முயற்சி செய்திருக்கிறார் என்பதும், முறைகேடுகளை, மோசடிகளை மறைத்து வருவதும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது. 

 

http://onelink.to/nknapp

 

அரசியல் பயணத்தில் தன்னை அடையாளப்படுத்தியது சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்ததே என்பதை தமிழக முதல்வர் அவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

 

எனவே ஆவின் நிறுவன வளர்ச்சி மீதும், பால் உற்பத்தியாளர்கள் நலன் குறித்தும் உண்மையாக கவலைப்படும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இனியாவது ஈகோ பார்க்காமல் உரிய நடவடிக்கைகளை விருப்பு வெறுப்பின்றி எடுக்க முன்வர வேண்டும் எனவும், மெய்ப்பொருள் காண்பதறிவு எனவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடர் கனமழை; தயார் நிலையில் ஆவின் நிர்வாகம்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Continuous heavy rain Management of Aavin readiness

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) மாலை 5 மணி அளவில் சேலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம் போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Continuous heavy rain Management of Aavin readiness

ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.