Skip to main content

திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Minister KN Nehru campaign in support of DMK candidate Arun Nehru

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், மற்றும் முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கிராமம், கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பிரச்சாரத்தை துவக்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு  பேசியதாவது:- முசிறி தொகுதியில் அதிமுக ஆட்சியின் போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவிரிக்கரை அருகிலே தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு உப்பு நீர் தான் குடிநீராக கிடைக்கிறது என்று சொன்னார்கள். அதை நான் மனதில் கொண்டு தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் துறையூர் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் ரூ 220 கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பணிகள் மேற்கொண்டு வருகிறோம். முசிறி அருகே உள்ள திருத்தலையூர் ஏரியை நிரப்பி அங்குள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் காவிரியில் குடிநீர் மோட்டார் வைத்து சோதனை ஓட்டம் பார்த்து வருகிறோம். மேலும் காவிரியில் இருந்து நீர் வரும்போது குடிநீர் வழங்கல் வாரியம் மூலமாக 700 கோடி செலவில் புதிதாக நீர் ஏற்றும் பாசன திட்டம்  உருவாக்கி தர விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் உதவி கேட்டு வருகிறோம்.

நீர் ஏற்றும் திட்டத்தின் மூலமாக உயரமான இடத்தில் உள்ள ஏரியை நிரப்பி அதன் மூலமாக கீழ்த்தளத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு நிரப்பி அப்பகுதி மக்களின் நீர் பற்றாக்குறையை நிறைவேற்றுவதற்கான திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அத்திட்டம் நிறைவேறவும் உள்ளது . விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீரேற்றும் பாசன வசதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பகுதிக்கு பாய் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா என பொதுமக்கள் கேட்டதற்கு இதுவரை பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை.

அந்த வகையில் பார்க்கும்போது கயத்தாறு பகுதியில் இது மாதிரி கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். ஏன் நான் இதை கூறுகிறேன் என்றால் நான் ஒன்று சொல்லிவிட்டு அது பொய்யாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதை கவனத்தில் கொண்டு அவ்வாறு பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் தரும் சூழ்நிலை இருந்தால் இப்பகுதி பாய் தொழிலாளர்களுக்கும் மிகவும் உறுதுணையாக இருப்பேன். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:-இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பினை உருவாக்கிட எனக்கு வாக்களித்து  வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்வில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் நல்லேந்திரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்