Skip to main content

கருத்து கந்தசாமியாக கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ள தங்களுக்கு... ஜெயக்குமாருக்கு பொன்னுசாமி கடிதம்

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

 

ஆவினில் எந்த சூழ்நிலையிலும் கலப்படம் நடைபெறவில்லை என்பதை நிருபித்து விட்டு பேசுங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 

அதில், மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்கம்.
 

நேற்று (24.11.2019) செய்தியாளர்களை நீங்கள் சந்தித்த போது அவர்கள் "பாலில் அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை குறித்து கேள்வி" எழுப்பியதும், அந்த கேள்விக்கு ஆவின் பால் தரமான பால் என்றும், ஆவின் பாலில் கலப்படம் நடைபெறவில்லை என சான்றளித்ததோடு, தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தீர்கள். ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களும் கடந்த 2017ம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் அதனை அவரால் நிருபிக்க முடியாமல் போனதை அறியாதவரல்ல நீங்கள்.
 

 Minister Jayakumar


 

மேலும் "அப்லாடாக்சின் எம்-1" என்கிற நச்சுத்தன்மை குறித்து சுகாதாரத்துறை அமைச்சரே வாய்மூடி மெளனமாக இருக்கும் போது மீன்வளத்துறை அமைச்சரான தாங்கள் கருத்து கந்தசாமியாக கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ள தங்களுக்கு ஆவின் பாலில் கடந்த காலங்களில் நடைபெற்ற கலப்படம் தெரியாமல் போனது மிகுந்த வியப்பளிக்கிறது.


 

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்களது (அதிமுக) கட்சி பிரமுகருக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு வரப்பட்ட பாலை விழுப்புரம் அருகே சாலையோரம் நிறுத்தி அதில் இருந்து பாலை திருடியதும், திருடிய பாலிற்கு பதில் கிணற்று நீரை கலந்த போது கையும், களவுமாக பிடிபட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் சரியான முறையில் நடத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட அந்த பிரமுகரை ஆவின் கலப்பட வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்ததையும் இந்த நாடே அறியும் போது பொறுப்பு மிக்க அமைச்சரான நீங்கள் மறந்து போனது அதிர்ச்சியளிக்கிறது.


 

மேலும் சேலம், வேலூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பாலில் கலப்படம் நடைபெற்றதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருபடி மேலே போய் கலப்படம் செய்யப்பட்ட ஆவின் பாலை ஆற்றில் கொட்டி அளித்ததும், பின்னர் வழக்குப் பதிவு செய்ததும், அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான பெருமைமிகு (?!) வரலாறும் ஆவினுக்கு உண்டு. 
 

அதுமட்டுமின்றி பாலில் கலப்படம் தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் "தமிழகம் பாதுகாப்பான பால் விநியோகம் செய்வதை உறுதி செய்யப்பட்ட நிலையில்" அப்போது நீதிபதிகள் இந்தியா முழுமைக்குமான அளித்த உத்தரவின் அடிப்படையில் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என முழங்கிய "உங்க அம்மா" ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசுக்கும், அப்போதைய முதல்வராக இருந்த அவருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும்  "பாலில் கலப்படம் தடுக்க எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் அவை கண்டு கொள்ளப்படாமல் இருந்ததோடு," மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்படவில்லை.
 

இந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களைப் போன்று எந்த நிறுவனத்தின் பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது...? என்பதை தெரிவிக்காமல் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து பேசும் தாங்கள் முதலில் ஆவின் பாலை தரமான பால் தரமானது தான், கலப்படம் இல்லாதது, நச்சுத்தன்மை அறவே கிடையாது என்பதை எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்து விட்டு தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் என சான்றளியுங்கள்.
 

Ponnusamy


 

அதுமட்டுமின்றி  குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் தமிழகம் முழுவதிலும் கலப்படம் இன்றியும், நச்சுத்தன்மை இல்லாமலும் தரமான வகையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும், அதனை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கவும் "சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, கால்நடைத்துறை, ஆவின், தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் அடங்கிய சிறப்பு உயர்நிலைக் குழு" அமைத்திட தமிழக முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அதனை நடைமுறைப்படுத்திட ஆவண செய்யுங்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.