Skip to main content

“பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே மொழி கொள்கை எடுபடாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இதனையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு செய்த சாதனை என்னவென்றால் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதியோர்களுக்கு வழங்கிய உதவித்தொகையை நிறுத்தியதுதான் சாதனை. சுமார் 7.5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திய பெருமை முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரையே சேரும். நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றவுடன் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களை உடனடியாக பதவி உயர்வு செய்ததால் அவர்கள் பணிசெய்யும் இடத்திற்கு புதிதாக ஆட்கள் நியமிக்க வேண்டிய நிலை வந்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறக் கூடிய சூழ்நிலை உருவானது. 

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சியில் நூறு சதவிகிதம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் இலவசமாக கல்வி கற்க காரணமாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கடந்த ஒரு வருடத்திற்குள் 1.25 லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்காக விவசாயிகள் மனு செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் விவசாயிகளை அழைத்து இலவச மின்சாரம் வழங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

 

அ.தி.மு.க. ஆட்சியின்போது பணம் கூடுதலாக கட்டிய விவசாயிகளுக்குத்தான் இலவச மின்சாரம் வழங்கினார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தளபதியாரின் ஆட்சியில் ஏழை எளிய விவசாயிகளுக்குத்தான் முதலில் இலவச மின்சாரம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கவும், பெண்கள் இலவசமாக பேருந்தில் சென்று வேலைக்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் இன்று மட்டும் அல்ல என்றுமே குரல் கொடுக்கும் இயக்கமாக தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் உள்ளது. தமிழனின் வீரம், பண்பு, கலாச்சாரம் அத்தனையையும் பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் உள்ள அத்தனை இயக்கமும் விரைவில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படும் நிலைமை உருவாகப் போகிறது. ஒன்றிய அரசு சொல்வது போல் ஒரே மொழி, ஒரே நாடு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சாத்தியப்படாது. இனி கிராம ஊராட்சிகளுக்கு அதிக அளவு நிதி உதவி வழங்கி கிராமங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது தான் எனது முதல் கடமையாகக் கருதி செயல்படுவேன்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.