Skip to main content

“திமுகவில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும்... அதிமுகவில் அப்படி அல்ல!” - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Minister C.V.Shanmugam speech at vizhupuram admk meeting


விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர்.  
 


அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அ.தி.மு.க தொண்டர்கள் கழகத்தின் மீது எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். தங்களது உழைப்பைக் கொடுத்து அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் மலரச் செய்வார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டுவரச் சபதம் ஏற்போம்.

 

கட்சியின் கரை வேட்டி கட்டிக்கொண்டு நடப்பதை நமது கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பெருமையாக நினைப்பார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இறப்பதற்கு முன்பு கடைசியாகப் பேசிய வார்த்தைகள் “என் மறைவிற்குப் பிறகும் நூறாண்டு காலம் நம் கட்சியும் ஆட்சியும் தமிழகத்தில் மலர வேண்டும், தொடர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் தி.மு.க என்பது குடும்ப அரசியல் இயக்கம். அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கான இயக்கம். 

 

மறைந்த எம்.ஜி.ஆரின் கனவை நினைவாக்க, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கொண்டுவருவதற்காக, மறைந்த நமது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாடுபட்டதைப்போல, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மலர, நமது கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் சிறப்பான, எளிமையான ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு உடனுக்குடன் எளிதாகச் சென்று சேர்கிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்குவந்தால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை மதிப்போடும் மரியாதையோடும்  நடத்துபவர்கள் அ.தி.மு.க.வினர். 


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர். இவர்கள், ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசு அலுவலர்களின் நிலைமை என்னவாகும் என்று நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை, பழங்குடியின மக்களை தரக்குறைவாகப் பேசியது தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி. இதுதான் தி.மு.க.வின் உண்மை நிலை. 


தமிழக மாணவர்களின் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க அரசு. அவர்களின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளது நமது அரசு. தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து, இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால், நாம் இத்தனை ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் வீண்போய்விடும். இதற்குத் தொண்டர்கள் சிறிதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. 


அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் உள்ள இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை எதிர்ப்பாகக் கருதக் கூடாது. அ.தி.மு.க ஆட்சி, தமிழகத்தில் மலர்வதற்குப் பெரும் துணையாக இருந்தது, இருப்பது, இருக்கப்போவது இளைஞர்களும் இளம்பெண்கள் பாசறையினர்தான். தமிழகத்தில் மக்களுக்குப் பயனுள்ள அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்காகக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின்போதுதான். அதேபோன்று தற்போது சிறப்பாக நமது ஆட்சி நடந்துவருகிறது. அது தொடர வேண்டும்.


கட்சியில் உழைக்கும் தொண்டர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.க கட்சியில்தான். தி.மு.க.வில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் வழிகாட்டுதலின்படி இளைஞர்கள் நடந்து, தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணி செய்ய வேண்டும். வருகின்ற தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்ற நிலையை எடுக்கக்கூடிய தேர்தல். 


இந்தத் தேர்தலில் இளைஞர் அணி, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி என அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான பூத் கமிட்டி அமைத்து, பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். இளைஞர்கள் கடும் பணியாற்றிட வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கின்றது.” இவ்வாறு அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பாகப் பேசினார். 


கூட்டத்திற்கு வருகைதந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடல் சாப்பாடு ஏற்பாடுகள் நடைபெற்றன. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க தனது கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி, அவர்களை தயார்ப்படுத்தி வருகிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ள செயல்வீரர்கள் கூட்டம். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.