Skip to main content

அமைச்சர்கள் மிரட்டல்... மெஜாரிட்டி இருந்தும் தேர்தலை புறக்கணித்த தி.மு.க. -இது ஒரு வினோதம் தான்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் பல ஊர்களில் சென்றமுறை பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. அப்படி ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம். இங்கு மொத்தம் 10 கவுன்சிலர்கள். இதில் திமுக ஆறு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒன்று, அதிமுக 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர். ஆக இது மிக எளிதாக திமுக வெற்றிபெறும் ஊராட்சி ஒன்றியமாக கருதப்பட்டது. 
 

- erode



இந்த நிலையில் சென்ற முறை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில் வாக்களிக்கும்போது அதிமுக உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிகொண்டு ஓடிவிட்டார். இதனால்தான் அப்போது இத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இன்று அந்த தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 

காலையில் பத்து முப்பதுக்கு எல்லாம் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஜாரிட்டியாக உள்ள திமுக கவுன்சிலர்கள் 7 பேரும் குறிப்பிட்ட நேரம் வரை  வராமல் தேர்தலைப் புறக்கணித்தனர். இது மக்களுக்கு வியப்பாக இருந்த நிலையில், அங்கு வந்த திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் "எங்கள் உறுப்பினர்களை அதிமுக அமைச்சர்கள் கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவருமே பலமுறை மிரட்டி உள்ளார்கள். இந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வெற்றி பெறக்கூடாது அதிமுக தான் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் மிரட்டி உள்ளார்கள். 
 

10 பேரில் மூன்று பேர் இருந்துகொண்டு நாங்கள் தான் தலைவராக வரவேண்டும் என கூறுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது இல்லை. மீறி இந்த தேர்தலில் எங்கள் கவுன்சிலர்கள் ஏழுபேரும் வந்தாலும் அதிகாரிகளை வைத்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது. இந்த தேர்தல் அதிகாரி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே தான் இன்று எங்கள் உறுப்பினர்களில் 7 பேரும் வாக்களிக்க வராமல் புறக்கணித்து விட்டனர்." என்றார். இதன்பிறகு தேர்தல் அதிகாரி பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தைக் கூறி தேர்தலை ரத்து செய்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து விட்டார்.


 

"அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று காரணம் கூறி தேர்தலை திமுக புறக்கணிப்பு செய்தது தவறு என்றும் திமுக உறுப்பினர்கள் 7 பேரும் ஒன்றாக இருக்கும்போது எப்படி 3 பேர் கொண்ட அதிமுக தலைவராக வெற்றி பெறுவார்கள்? ஒருவகையில் திமுகவினர் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேச்சை மற்றும் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் இருந்தும் அதிமுகவுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு அதிமுக வெற்றி பெற்றது. அதுபோல் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் திமுக கோட்டை விடும் போல் தெரிகிறது. யார் மிரட்டினாலும் மெஜாட்டி கவுன்சிலர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் பயப்பட வேண்டும்" என ஈரோடு மாவட்ட திமுக மூத்த உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். 
 

மேலும் அவர்கள் கூறும்போது கட்சித் தலைமை ஈரோடு மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி நடைபெற்ற இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பகுதியையும் அதேபோல் மறைமுகத் தேர்தலில் திமுக அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த இடத்தையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட திமுக பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்