Skip to main content

அமைச்சர்கள் மிரட்டல்... மெஜாரிட்டி இருந்தும் தேர்தலை புறக்கணித்த தி.மு.க. -இது ஒரு வினோதம் தான்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் பல ஊர்களில் சென்றமுறை பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. அப்படி ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம். இங்கு மொத்தம் 10 கவுன்சிலர்கள். இதில் திமுக ஆறு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒன்று, அதிமுக 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர். ஆக இது மிக எளிதாக திமுக வெற்றிபெறும் ஊராட்சி ஒன்றியமாக கருதப்பட்டது. 
 

- erode



இந்த நிலையில் சென்ற முறை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில் வாக்களிக்கும்போது அதிமுக உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிகொண்டு ஓடிவிட்டார். இதனால்தான் அப்போது இத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இன்று அந்த தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 

காலையில் பத்து முப்பதுக்கு எல்லாம் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஜாரிட்டியாக உள்ள திமுக கவுன்சிலர்கள் 7 பேரும் குறிப்பிட்ட நேரம் வரை  வராமல் தேர்தலைப் புறக்கணித்தனர். இது மக்களுக்கு வியப்பாக இருந்த நிலையில், அங்கு வந்த திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் "எங்கள் உறுப்பினர்களை அதிமுக அமைச்சர்கள் கருப்பண்ணன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவருமே பலமுறை மிரட்டி உள்ளார்கள். இந்த தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வெற்றி பெறக்கூடாது அதிமுக தான் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் மிரட்டி உள்ளார்கள். 
 

10 பேரில் மூன்று பேர் இருந்துகொண்டு நாங்கள் தான் தலைவராக வரவேண்டும் என கூறுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது இல்லை. மீறி இந்த தேர்தலில் எங்கள் கவுன்சிலர்கள் ஏழுபேரும் வந்தாலும் அதிகாரிகளை வைத்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது. இந்த தேர்தல் அதிகாரி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே தான் இன்று எங்கள் உறுப்பினர்களில் 7 பேரும் வாக்களிக்க வராமல் புறக்கணித்து விட்டனர்." என்றார். இதன்பிறகு தேர்தல் அதிகாரி பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தைக் கூறி தேர்தலை ரத்து செய்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து விட்டார்.


 

"அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று காரணம் கூறி தேர்தலை திமுக புறக்கணிப்பு செய்தது தவறு என்றும் திமுக உறுப்பினர்கள் 7 பேரும் ஒன்றாக இருக்கும்போது எப்படி 3 பேர் கொண்ட அதிமுக தலைவராக வெற்றி பெறுவார்கள்? ஒருவகையில் திமுகவினர் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், சுயேச்சை மற்றும் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் இருந்தும் அதிமுகவுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு அதிமுக வெற்றி பெற்றது. அதுபோல் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் திமுக கோட்டை விடும் போல் தெரிகிறது. யார் மிரட்டினாலும் மெஜாட்டி கவுன்சிலர்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் பயப்பட வேண்டும்" என ஈரோடு மாவட்ட திமுக மூத்த உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். 
 

மேலும் அவர்கள் கூறும்போது கட்சித் தலைமை ஈரோடு மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி நடைபெற்ற இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பகுதியையும் அதேபோல் மறைமுகத் தேர்தலில் திமுக அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த இடத்தையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட திமுக பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.