Skip to main content

மனுத்தாக்கல் செய்ய தராசுடன் வந்த மகாத்மா காந்தி; ஈரோடு இடைத்தேர்தல் சுவாரசியம்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Mahatma Gandhi came with scales to petition; Erode by-elections are interesting

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும், அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை. 

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் (42) மகாத்மா காந்தி வேடத்தில் கையில் தராசில் பத்து ரூபாய் நாணயங்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வைத்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அத்துடன் கியூ.ஆர்.கோட் மூலம் தனது பயோடேட்டாவையும் கொண்டு வந்திருந்தார்.

 

இது குறித்து அவர் கூறும் பொழுது, “எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம். யோகா பயிற்சியாளராக உள்ளேன். இதுவரை 9 முறை தேர்தலில் நின்று உள்ளேன். இன்று 10-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்துள்ளேன். தேர்தலில் நிற்பதற்காக டெபாசிட் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் தற்போது பத்து ரூபாய் நாணயங்கள் எங்கும் வாங்க மறுக்கிறார்கள். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயங்களை தராசு போட்டு எடுத்து வந்துள்ளேன்” எனக் கூறினார்.

 

இதேபோல் மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன்(38) என்பவர் கையில் டம்மி ரூபாய் நோட்டுகளுடன் பணத்தூண்டிலுடன் தாக்கல் செய்ய வந்தார். மேலும் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளையும் கைகளில் கொண்டு வந்திருந்தார்.

 

Mahatma Gandhi came with scales to petition; Erode by-elections are interesting

 

இது குறித்து அவர் கூறும் பொழுது, “இது எனக்கு மூன்றாவது தேர்தல். மக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தவறு. சில அரசியல் கட்சியினர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பெறுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூண்டிலுடன் வந்துள்ளேன்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.