Skip to main content

சாமிநாதனுக்கு மட்டுமல்ல... அவரது மகனுக்கும் மட்டுமல்ல... அவரது பேரன் பேத்திகளுக்கும்... மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 05/09/2019 | Edited on 05/09/2019


 

தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

பின்னர் பேசிய ஸ்டாலின், 
 

இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பானதொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் பெருமைப்படுகிறேன். அதற்காக நான் சாமிநாதன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

M. P. Saminathan


 

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் உள்ளே வருகின்ற நேரத்தில் சாமிநாதன் நன்றியுரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச்சொன்னார், “ஒரு மாநாடு போல்” என்று. உணமைதான், மாநாட்டிற்கு என்னென்ன சிறப்பு இருக்குமோ, அத்துனை சிறப்புகளும் - ஏதோ இது திருமண விழா நம்முடைய இல்லத்தோடு முடித்துக்கொள்ளலாம், உறவினர்களை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம், கட்சியினரை மட்டும் அழைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், சாமிநாதன் அவர்கள் இந்த திருமணம் குடும்பத் திருமணமாக இருந்தாலும், இது கழக குடும்பத் திருமணமாக அமைய வேண்டும் என்ற நிலையில் - ஒரு மாநாடுபோல், மாநாட்டிற்கு எந்தெந்த பணிகள் எல்லாம் ஆற்ற வேண்டுமோ அந்த நிலையில், உரையாற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ஒருவரையும் விட்டுவிடாமல் குறிப்பிட்டுச் சொன்னார். அதுதான் சாமிநாதன். பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருப்பார்.


 

ஆனால், அவர் எடுத்து வைக்கும் பணிகள், சொல்லக்கூடிய கொள்கை, இலட்சியம், அழுத்தம், உள்ளபடியே பாராட்டப்படவேண்டிய ஒன்றாக அவர் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
 

அவருடைய திருமணத்தை 1990ம் ஆண்டு இதே திருப்பூரில் நான் நடத்தி வைத்திருக்கிறேன் என்று இங்கு சொன்னார்கள். மணவிழா மலர் வெளியிடப்பட்டபோது, புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தினை நான் உற்று உற்று பார்த்தேன். அந்த புகைப்படத்தில் 'கோட் சூட்' அணிந்து கொண்டு, எந்த முகபாவத்தோடு இருக்கின்றாரோ, அதே முகபாவத்தோடு தான் இன்றும் இருக்கிறார்.
 

நான் கூட கொஞ்சம் மாறி இருக்கலாம், 'போட்டோவில் சொல்கின்றேன்'!
 

கொள்கையிலும் இலட்சியத்திலும் மாறவில்லை!!
 

1990ல் அவருடைய திருமணத்தை நான் தலைமை ஏற்று நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு 2019ல் அவருடைய மகன் ஆதவன் அவர்களுக்கும் திருமணம் நடத்திவைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தான் அவர்களும் சொன்னார்.
 

அவருடைய மகனுக்கு மட்டுமல்ல, அவருக்கு பிறக்கக்கூடிய பேரன் பேத்திகளுக்கும் நான்தான் வந்து திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போதே தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக மணமக்கள் அவசரப்பட்டுவிடக்கூடாது 'பொறுத்தார் பூமியாள்வார்'.


 

நாம் பொறுத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, படிப்படியாக நம்முடைய சாமிநாதன் அவர்கள் வளர்ச்சி பெற்றிருப்பதை நான் நினைத்துப்பார்க்கின்றேன். இளைஞர் அணியில் உறுப்பினராக ஒன்றிய அளவில் இருந்து பணியாற்றி, அதற்குப் பிறகு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் துணை அமைப்பாளராக கடமையை நிறைவேற்றி, அதன் பிறகு மாவட்ட அமைப்பாளராகவும் இடையில் மாவட்டக் கழகத்தின் செயலாளராகவும், நான் இளைஞர் அணியில் செயலாளராக இருந்தபோது எனக்கு துணை நின்று துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து பணியாற்றி, அதற்குப் பின்னால் இணைச் செயலாளராகவும், நான் செயல் தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால், இளைஞர் அணியில் செயலாளராகவும் பொறுப்பேற்று இன்றைக்கு கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து அவர் இயக்கத்திற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்.
 

இடையில் அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்திருந்த அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு பேசினார்.









 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.