Skip to main content

நபிகளை கார்ட்டூன் வரைவதா? - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

dddd

 

பிரான்சில் இருந்து வெளிவரும் 'சார்லி ஹெப்டே' என்ற பத்திரிகை, இஸ்லாமிய மார்க்க நெறிகளுக்கு மாறாக நபிகள் நாயகத்தின் உருவத்தைக் கேலிச்சித்திரமாக வரைந்து, ஒட்டுமொத்த உலக முஸ்லீம்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதைக் கண்டித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா சுடச்சுட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

 

அது...

 

நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரத்தை பிரெஞ்ச் பத்திரிகையான சார்லி ஹெப்டே வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் ஆகும்.

 

பிரான்ஸ் அரசின் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் 'நைஸ்' நகரில் ஒரு தேவாலயத்தில் புகுந்து ஒரு பெண் உட்பட மூன்று நபர்களைப் படுகொலை செய்ததும் மன்னிக்கமுடியாத, வன்மையாகக் கண்டிக்கத்தக்க படுபாதகச் செயல் ஆகும்.

 

இதேபோல், பாரீஸ் நகரில் புறநகர்ப் பகுதியில் ஒரு பள்ளிக்கூட வகுப்பில் சாமுவேல் பட்டி என்ற ஆசிரியர், நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களை வகுப்பில் காட்டிய தவறான செயலுக்காக, அவரது தலையை வெட்டியிருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை ஆகும்.

 

இத்தகைய வன்முறைக்கும் கொலைவெறிக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் அணுவளவும் இடமில்லை. ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் அனைவருக்குமான ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர் கருணையுடன் நடக்க வேண்டும் என்று போதித்து, அந்த அடிப்படையில் ஆட்சி செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறமதத்தவர்களிடம் கருணையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயின் யூதர்களுக்கு சுவர்க்க பூமியாக இருந்தது என யூரி அவ்னெரி என்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளரும் குறிப்பிட்டுள்ளர்.

 

Ad

 

பன்முகச் சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைகளை வகுத்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை பிரான்ஸ் அரசு ஊக்குவிப்பதும் இதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளையும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களையும் புறந்தள்ளிவிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொலை பாதகச் செயலில் ஈடுபடுவதும் மனிதநேயத்திற்கு விரோதமான நடவடிக்கைகளே ஆகும்.

 

இந்தப் படுபாதகச் செயல்களின் பின்னணியில் உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் ஒருபோதும் இருக்கமுடியாது. பிரான்ஸ் வன்முறைகளையும் அதற்கு வழிவகுக்கும் பொறுப்பற்ற அரசாங்கத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

-ம.ம.க தலைவர்,

பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா..

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.