Skip to main content

கரன்சி மழையில் நனையும் உள்ளாட்சித் தேர்தல்..

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Local elections soaked in currency

 

உள்ளாட்சித் தேர்தல் களம் வெப்பத்தின் கொள்ளளவையும் தாண்டி தகிக்கிறது. சட்டமன்றத் தேர்தலைவிட கரன்சிகள் காற்றாய் பறக்கின்றன. பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் வேட்பாளர்களின் போட்டியால் வாக்குகள் ஏலம் போகுமளவுக்கு நிலைமைகள் எட்டியுள்ளன.

 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி வாக்குப்பதிவுகள் 6, மற்றும் 9ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் ஊராட்சி வார்டு, ஒன்றிய வார்டு கவுன்சிலர்களைவிட ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் கட்சிகள், வேட்பாளர்களிடையே கடும் போட்டி. இந்தப் போட்டிகளே வோட்டுக்கான ரூபாயின் எண்ணிக்கையை ஏல முறை அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது.

 

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் பலதரப்பான வியாபாரங்களைக் கொண்ட முன்னணி ஊராட்சி. இதன் தலைவர் பதவி பெண்களுக்கானது. களத்தில் முக்கிய மூன்று வேட்பாளர்களின் போட்டி என்றாலும், மணிவண்ணன், மதிசெல்வன், இளங்கோ மூவரின் சார்பில் அவர்களின் மனைவியர் களத்தின் வேட்பாளர்கள். மூன்று பேருமே திமுகவைச் சார்ந்தவர்கள். இவர்களில் மணிவண்ணன் அதிமுகவிலிருந்து திமுகவின் பக்கம் வந்தவர்.

 

எப்படியும் தங்கள் சார்ந்தவரைத் தலைவியாக்கிவிட வேண்டும் என்ற தீவிரத்தில் ஆரம்பத்தில் தெரிந்தும் தெரியாமலும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய, மற்றவர்களும் போட்டியாக சப்ளை செய்தனர். இதற்கு சற்றும் சளைத்ததாகத் தெரியவில்லை, அருகிலுள்ள கல்லூரணி பஞ்சாயத்தில் நடந்தவை. இந்த ஊராட்சிக்குரியத் தலைவர் பதவிக்கு ஐந்து வேட்பாளர்கள் மோதுகின்றனர். போட்டி அனல் தெறித்தாலும் ‘டப்பு’ இல்லாமல் வேலையாகாது என அங்கேயும் கரன்சி மழை பொழிந்தது. குற்றாலம் பக்கம் உள்ள ஆயிரப்பேரியில் கரன்சி சப்ளை நடந்துள்ளது.

 

மாவட்டத்தின் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் வைட்டமின் பட்டுவாடாவில் மாறுபட்ட அணுகுமுறையாம். இங்கே ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதைவிட வலுவான மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கிடையே இழுபறி இருக்கிறதாம். 

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி பக்கமுள்ள மறுகால்குறிச்சி ஊராட்சித் தலைவர் பதவிக்கும் நாங்குநேரி யூனியனுக்குட்பட்ட வடுகட்சிமதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் அரியகுளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் பட்டுவாடா நடந்திருப்பது உட்சபட்சமானது என்று புருவங்களை உயரவைக்கிறது.

 

9ஆம் தேதியன்று நடக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் பகுதியின் பிரச்சாரத்திற்காக வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பி.எஸ்., தென்காசி மற்றும் பொன்னாக்குடிப் பகுதிகளில் மாவட்டத்தில் போட்டியிடுகிற அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தவர், ஜெயலலிதா ஆட்சியின்போது கல்வியில் முன்னேற்றம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், மிக்சி கிரைண்டர் வழங்கியது, அவரது ஆட்சியின்போது நடந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்யுங்கள், என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் ஒ.பி.எஸ்.

 

Local elections soaked in currency

 

வேட்பாளர்களுக்கான தேர்தல் பணம் பற்றிப் பேசுவார், உதவுவார் என்று ஏக எதிர்பார்ப்புகளுடன் இருந்த வேட்பாளர்களுக்கு, ஒ.பி.எஸ். பணம் பற்றிய பேச்சை மருந்தக்குக் கூடப் பேசாமலிருந்ததும் அதே சமயம், கட்சியும் இரண்டு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களான மாஜி அமைச்சர்கள் கவனிப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்லப்பட்டாலும் அருகிலிருந்த மாஜிக்களோ இதுபற்றி வாய் திறக்கவேயில்லையாம். இறுதிவரை மாஜிக்கள் தங்களின் கல்லாப் பெட்டிகளைத் திறக்காமல் வைட்டமின் விஷயத்தில் நழுவிக்கொண்டார்களாம்.

 

வைட்டமின் பற்றியவைகளைக் கவனமாகத் தவிர்த்த ஒ.பி.எஸ். தன்னுடைய கட்சி மற்றும் தேர்தல் பிரச்சாரக் கடமைகளை முடித்துக்கொண்டு கிளம்பியதால் கடுப்பிலிருந்த வேட்பாளர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடனிருந்த அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் பேசியபோது,

 

“ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். பிரச்சார முறைகளைப் பேசியதில் எடப்பாடி பழனிசாமியைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். அது அவர்களின் உரசலை வெளிப்படுத்துகிறது. கட்சித் தலைமையில் முடிவு எடுக்கிற இடத்திலிருக்கும் ஒ.பி.எஸ். ஒப்புக்குக் கூட தேர்தல் செலவு பற்றி பேசாமல் வெறுங்கையால் முழம் போட்டுவிட்டுப் போயிருக்கிறார் ஆட்சியின்போது வளமாக இருந்த மாஜி அமைச்சர்கள் கூட இந்த விஷயத்தில் கழுவிய மீனாக நழுவிக்கொண்டார்கள். அம்மா காலம் என்றால் இப்படி இருக்குமா. கடன்பட்டும் கையிருப்பைக் காலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்கிறார்கள் வேதனையோடு.

 

ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிருப்தியில் தள்ளியிருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.