Skip to main content

கரையேறாத அமைச்சரின் வேட்பாளர்! கயத்தாறு யூனியன் அ.ம.மு.க. வசம்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 யூனியன்களில் பல ஊராட்சிப் பகுதிகளில் பஞ்.தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து மீதமாக முதற்கட்டமாக 1126 உள்ளாட்சிப் பகுதிகளுக்கும் 2ம் கட்டமாக 1275 பதவிகளுக்கும் தேர்தல் நடை பெற்றது. மாவட்டத்தின் 12 யூனியன்களில் பதிவான வாக்குகள் 12 மையங்களில் எண்ணப்பட்டன.

 

ammk



குறிப்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட கயத்தாறு யூனியனின் வாக்குகள் பிரச்சினை காரணமாக கோவில்பட்டியின் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் எண்ணப்பட்டன. கயத்தாறு யூனியனில் தான் அமைச்சர் கடம்பூர் ராஜின் கிராமம் வருகிறது. எனவே யூனியன் சேர்மன் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் கடம்பூர்ராஜ் 13 வது வார்டில் மகேஸ்வரி என்ற வேட்பாளரை யூனியன் கவுன்சிலர் பதவி மற்றும் சேர்மன் பொறுப்பிற்காகவும் களமிறக்கி அவரே பிரச்சாரமும் செய்தார். ஆனால் கட்சி கரன்சி தரும் என்று நம்பிய மகேஸ்வரிக்கு கரன்சி வந்து சேரவில்லை. மாறாக தன் சொந்தப்பணத்தைக் காலி செய்தார்.


 

 

அதே சமயம் இந்த யூனியனின் கடம்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் கடம்பூர் ஜமீன் பரம்பரையான அ.ம.மு.க.வின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்கராஜா. ஆதிமுதல் தற்போது வரை கயத்தாறு யூனியன் அவர் வசமிருக்கும். வாய்ப்பை பயன்படுத்திக் கொணட ராஜா, தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியதோடு போட்டியிலிருந்த மூன்று தி.மு.க. வேட்பாளர் உட்பட தானும் 15 வது வார்டில் நின்றார் யூனியன் முழுக்க எதிரணி வேட்பாளர்கள் அனைவரின் தேர்தல் செலவையும் ராஜாவே ஏற்றார். வாக்கு எண்ணிக்கையில் யூனியனை அ.ம.மு.க. கைப்பற்றியது. அமைச்சர் கடம்பூர்ராஜின் வேட்பாளர் கரையேறவில்லை. முடிவு அறிவிக்கப்பட்டதில் 8 பேர் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்ள். ம.தி.மு.க. 2 தி.மு.க. 2 சுயே 1 என்ற விகிதத்தில் வென்றுள்ளனர். கயத்தாறு அ.ம.மு.க. வசம் போனது.


 

இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் பிச்சிவிளை பஞ்.தலைவி பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்ப்புத் தெரிவித்து 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. பஞ்.தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி, சுந்தராச்சி இருவர் போட்டியிட்டனர். கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். சமாதான பேச்சு வார்த்தை எடுபடவில்லை. புறக்கணிப்பு காரணமாக இந்த வார்டில் பட்டியலின மக்கள் 6 பேர்கள் உள்ளிட்ட 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரிக்கு 10 வாக்குகளும், சுந்தராச்சி 2 வாக்குகள் செல்லாதது ஒன்று என்றானதால் 10 வாக்குகள் பெற்று பஞ்.தலைவியானார் ராஜேஸ்வரி. தமிழகத்தில் 10 வாக்குகள் பெற்று பஞ்.தலைவியான ஒரே தலைவர் ராஜேஸ்வரி தான்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.