கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6 நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது “கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசியப் புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்கிறது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.
1) தேச விரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள்.
2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலகப்புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.
3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல் தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.