Skip to main content

‘மோடி பதவியேற்ற நாளை தேசிய கறுப்புநாளாகக் கடைப்பிடிப்போம்!’ - தொல். திருமாவளவன்

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

‘Let us observe the day of Modi’s inauguration as National Black Day!’ - thirumavalavan

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைக்கள் ஒன்றுகூடி தலைகநர் டெல்லியில் தொடர்ந்து ஆறுமாத காலமாக போராடிவருகின்றனர். விவசாய சங்கங்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், அவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்நிலையில், மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான 26ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். 

 

அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், மே 26ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று தமிழகம் முழுவதும் மே 26ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

 

2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதிதான் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை, எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதும் கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும்கூட மோடி அரசு குறைத்துவிட்டது.

 

எஸ்சி-எஸ்டி, ஓபிசி பிரிவு மக்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியை ஒவ்வொரு ஆண்டாகக் குறைத்து, அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்துவருகிறது மோடி அரசு. எஸ்சி துணைத் திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் 16.6 சதவீதம் நிதி ஒதுக்குவதற்குப்  பதிலாக வெறும் 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்குப் பல்வேறு தடைகளை அரசாங்கத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மோடி அரசு ஏற்படுத்திவருகிறது. அது கொண்டுவந்த 102ஆவது சட்டத் திருத்தத்தின் காரணமாக மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதும், இடஒதுக்கீடு அளிப்பதும் இயலாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து எல்லாவற்றையும் தன் கையில் குவித்துக்கொண்டு மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற யூனியன் பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.

 

கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு எவ்விதமான உருப்படியான திட்டங்களையும் வகுக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க மோடி அரசு காரணமாகியுள்ளது. தடுப்பூசிகளை வழங்குவதிலும், ஆக்சிஜன் என்னும் உயிர்வளி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டியதால் உச்ச நீதிமன்றமே தலையிடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை உலக அளவிலான ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுவருகின்றன.

 

அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்திவரும் மோடி அரசு, பாராளுமன்றத்தையும் மதிப்பதில்லை. 70க்கும் மேற்பட்ட அவசர சட்டங்கள் மோடி அரசால் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சிறார்களுக்கும் எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

 

சிறுபான்மையினரை எதிரிகளாக சித்திரித்து இந்துக்களிடம் வகுப்புவாத வெறியை ஊட்டி, மயக்கி  அவர்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த மோடியின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள்தான். கரோனாவால் உயிரிழப்பவர்களிலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுகிறவர்களிலும், மோடி அரசின் கொள்கைகளால் வேலை இழந்தவர்களிலும், ஜிஎஸ்டி முதலான வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களிலும் இந்துக்கள்தான் அதிகம். எனவே, மோடியின் ஏழாண்டுகால ஆட்சி 'இந்துக்களுக்கு விரோதமான ஆட்சி' என்பதே உண்மை.

 

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்துவிட்ட மோடி அரசு,  ஒரு மக்கள் விரோத அரசு என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே 26ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று 'தேசிய கறுப்பு நாளாகக்' கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.