
2026ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். மேலும், பா.ஜ.கவுக்கு சாதகம் இல்லாத மாநிலங்களில் தொகுதிகளை குறைக்கவும், பா.ஜ.கவுக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கவும் தொகுதி மறுசீரமைப்பு மூலமாக பா.ஜ.க சதி செய்வதாக தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்தும் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். ஆனால், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என பா.ஜ.கவினர் வெறும் வாய் வார்த்தையாக கூறி வருகின்றனர். இதற்கிடையில், சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்போவதாக மத்திய பா.ஜ.க அரசு தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில், நேற்று (06-06-25) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. 1971ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்’ எனப் பதிவிட்டார்.

இந்த நிலையில், மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கிட்டத்தட்ட நான்ரை ஆண்டுகள் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, டாஸ்மார்க் ஊழல், இப்படி பல ஊழல்களால் தெரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை நடத்துவது முதலமைச்சரா என்பதே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னுடைய முழுமையான தோல்வியை மறைப்பதற்காக மத்திய அரசாங்கத்தை குறை சொல்வதையே ஒரு வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஏற்கனவே பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறது, தெலுங்கானாவில் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அதை நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனசு இல்லை. ஆனால் அதை மீறி, மத்திய அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக நீதியினுடைய உண்மையான தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். இங்கு போலி சமூக நீதி பேசிக்கொண்டு போலியாக வேடத்தை போட்டுக்கொண்டு ஸ்டாலின் மக்களை இல்லாத ஒரு விஷயத்தை திசை திருப்புகிறார். மறு சீரமைப்பில் இல்லாத ஒரு விஷயத்தை நாம பேசி இருக்கிறோமா? பாராளுமன்ற விவகாரத்துறை இதை பற்றி எங்காவது பேசி இருக்கிறாரா? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதி மறுசீரமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் இந்த மாதிரி விஷயங்களை திசை திருப்புவதை விட்டுவிட்டு இந்த அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்ற போலியான ஒரு பிம்பத்தை தமிழக மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குவதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.