Skip to main content

பாஜகவிற்கு ஆதரவு தரும் குமாரசாமி?அதிர்ச்சியில் காங்கிரஸ்!கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார். இந்நிலையில் பாஜக கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களுருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 
 

karnataka



இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக, அம்மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து முதல்வராக எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம், பாஜகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் ஜி.டி. தேவ கவுடா பேசும் போது, “எங்கள் கட்சியின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். 


மீதமுள்ளவர்கள், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கட்சியை வளர்க்க பரிந்துரைத்துள்ளனர்” என்றார். இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தான். அவர் நினைத்து இருந்தால் அவர்களிடம் பேசி சமரசம் செய்திருக்க முடியும். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்தவித முயற்சியும் பெரிய அளவு எடுக்கவில்லை என்று குமாரசாமி தரப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பாகி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.