Advertisment

ஜெ., சசிகலாவுக்கு கொத்தடிமை... இன்றைய முதல்வருக்கு எடுபிடி... கே.எஸ்.அழகிரி ஆவேசம்

ஊழல் செய்வதையே அன்றாட தொழிலாக கொண்டிருக்கிற ராஜேந்திர பாலாஜிக்களை தோலுரித்துக் காட்டுகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிற அமித்ஷா, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். இதன்மூலம் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது இந்தி பேசாத மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழிக்கு விரோதமாக இந்தியை திணிக்க எத்தனிக்கிற அமித்ஷாவை கண்டிக்கிற வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டுகிறேன்.

Advertisment

rajendra balaji ks azhagiri

அதேபோல, தமிழக அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களில் சிலர் தான்தோன்றித்தனமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு அரசியல் கோமாளியைப் போல வாய்க்கு வந்தபடி எல்லோரையும் வசை பாடுவதனால் ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கிற வரை கொத்தடிமைகளாக இருந்த அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் இப்பொழுது அரசியல் கோமாளிகளைப் போல நடந்து வருகிறார்கள். இவர்களுடைய பேச்சு எல்லோரையும் அருவெறுக்கச் செய்கிறது. இதில் குறிப்பாக, ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல்காந்தி ஆகியோரை ஒருமையில் தரக்குறைவாக நாக்கில் நரம்பின்றி பேசியிருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி விரைவில் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல இருக்கிற ராஜேந்திர பாலாஜி, தியாக திருவிளக்கு அன்னை சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல்காந்தி ஆகிய அப்பழுக்கற்ற தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான அருகதையோ, யோக்கியதையோ இல்லை. தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிற இவர்கள் பேசுகிற பேச்சால் காங்கிரஸ் தலைவர்களின் புனிதத்தை சிதைத்து விட முடியாது.

ஜெயலலிதா இருக்கிற வரை அவருக்கு கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவரது மறைவிற்கு பிறகு சசிகலாவின் கொத்தடிமைகளாக இருந்தார்கள். உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய பிறகு அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்றைய முதலமைச்சரின் எடுபிடிகளாக இருந்து கொண்டு ஊழல் செய்வதையே அன்றாட தொழிலாக கொண்டிருக்கிற ராஜேந்திர பாலாஜிக்களை தோலுரித்துக் காட்டுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. விரைவில் இவர்களது முகத்திரை கிழித்தெறியப்பட்டு, இவர்கள் யார் என்பதை தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் இந்தியை ஆட்சி மொழியாக திணிக்க வேண்டும் என்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் நாளை (18.9.2019) புதன்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அவசியம் நடத்திடுமாறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

admk congress rajendra balaji KS Azhagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe