Skip to main content

இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் அ.தி.மு.க. செய்து விட முடியாது: கே.எஸ்.அழகிரி

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவையில் 303 உறுப்பினர்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டாமல் மதரீதியாக பிளவு அரசியலை நடத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே, இஸ்லாமியர்களின் ஒப்புதல் இல்லாமல் முத்தலாக் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் அசாமில் கணக்கெடுப்பு நடத்தியதில் பல்வேறு குளறுபடிகள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களுக்கு உறுப்பு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சலுகைகள் பறிப்பு என தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு எடுத்து வந்தது. 

 

ks azhagiri



எல்லாவற்றிற்கும் மேலாக, 450 ஆண்டுகாலமாக இருந்த பாபர் மசூதி இடிப்பை கிரிமினல் குற்றமாக உச்சநீதிமன்றம் கருதியது. ஆனால், இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.  சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அறிஞர் பெருமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி, கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தலைநகர் தில்லியில் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், இந்து பனாரஸ் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி. மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், லக்னோ, வாரணாசி, கல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். 
 

எந்தவித நியாயமான காரணமும் இன்றி பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினால் நாடே கலவர பூமியாக மாறியிருக்கிறது. அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்டதால் இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்களைத் தவிர, மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகள் அச்சுறுத்தப்பட்டு, ஆதரவு பெறப்பட்டுள்ளது. 


 

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 125, எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்காது. இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுக்கிற சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க. ஆதரித்திருப்பதன் மூலம் பா.ஜ.க.வின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயல்படுகிற கட்சியாக மாறியிருப்பதை உறுதி செய்கிறது. இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் அ.தி.மு.க. செய்து விட முடியாது.
 

பா.ஜ.க.வின் பிதாமகர்களாக விளங்குகிற சாவர்கர், கோல்வார்கர் விதைத்த நச்சுக் கருத்துக்களின் அடிப்படையில் இத்தகைய மதவாத அரசியல் நடத்தப்பட்டு இந்தியாவை பிளவுபடுத்துகிற அணுகுமுறை கையாளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்து ராஷ்ட்ராவை உருவாக்குகிற முயற்சியில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஈடுபட்டு வருகிறார்கள். 1955 இல் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டம், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால், 2019 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்க முற்படுகிறது. இதைத் தான் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 


 

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வருகிறவர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால், மற்ற அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, பூடான், நேபாளில் இருந்து வருகிற மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இச்சட்டம் மறுக்கிறது. இதைவிட அப்பட்டமான பாகுபாடு வேறு என்ன இருக்க முடியும் ? மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வடிவமைத்துக் கொடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்து சிதைக்கிற முயற்சியாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மதரீதியாக சீர்குலைக்கிற பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவதன் வெளிப்பாடுகளே தற்போது நடைபெறுகிற எதிர்ப்பு போராட்டங்களாகும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.