Skip to main content

பணமதிப்பிழப்பு; பிரதமர் மோடி தப்ப முடியாது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

ks alagiri talk about demonetisation and pm modi

 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மக்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்ததால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இதனை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததும் சரி. செயல்படுத்திய முறையும் சரி. அதனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” எனத் தீர்ப்பளித்தது.  

 

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒன்றிய அரசு 2016 நவம்பர் 8 இல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

 

பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அன்று அறிவித்த போது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கலில் விரிவான கலந்தாய்வு 8 மாதங்களாக நடந்ததாகக் கூறியிருக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8-க்கு முன்பு 2 மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பில் இருந்தார். அவர் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார். அதற்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த டாக்டர் உர்ஜித் படேலும் அதே நிலை தான் எடுத்திருந்தார். அதனால், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியபடி விரிவான கலந்தாய்வு நடந்தது என்பது உண்மைக்குப் புறம்பான கருத்து என்பது அம்பலமாகியுள்ளது.

 

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் முடிவெடுத்து தனது சுயாட்சி தன்மையை கேலிக்குரியதாக ஆக்கிவிட்டது. இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. அதில் திரும்ப வந்தது ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி. திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு ரூ.12,877 கோடி. ஆனால், இதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூ.12,777 கோடி. இவ்வகையில் ரூ.100 கோடி மட்டுமே அரசுக்கு பலனாக கிடைத்திருக்கிறது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 99 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்து விட்டன.

 

கருப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த இருந்த கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு தான் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்திருக்கிறது. மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான பேர் வேலை இழந்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோதப் பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது.” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும்’ - விஜய் அரசியல் வருகை குறித்து கே.எஸ். அழகிரி

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அதே சமயம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறையில் செல்வாக்கு மிக்கவராக கலைப்பணி ஆற்றும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சை பேச்சு; கே.எஸ். அழகிரி கண்டனம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாற்றை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.