Skip to main content

எடப்பாடி அரசுக்கு துணிவு இருக்கிறதா? கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/05/2020 | Edited on 22/05/2020
ks alagiri


இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து வருகிற மே 26 ஆம் தேதி சமூக ஊரடங்கை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


1. விவசாயிங்கள், குடிசைவாசிகள், கைத்தறி நெசவாளர்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை நோக்கமாக கொண்டதே மத்திய மின்சார சட்டத் திருத்தம்.
 

2.விவசாயிகளிடம்  மின் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்றால் தமிழக அரசின் கடன்வரம்பு குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் சுற்றறிக்கை கூறுகிறது. இதை தடுத்து நிறுத்துகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இருக்கிறதா?
 

3. ஆற்றுப்பாசன விவசாயிகள் எந்த கட்டணமும் இல்லாமல் நீர்ப்பாசனத்தை பெறுகிறார்கள். அதே சலுகையை விவசாயிகளின்  பம்ப் செட்டுகளில்  பயன்படுத்துகிற மின்சாரத்தை இலவசமாக அளிப்பதன் மூலமே சமநிலை தன்மை உருவாகும். எனவே இலவச மின்சாரம் என்பது. சலுகையல்ல, அது ஒரு உரிமை. 
 

4. மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சார பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து வட்டார, நகர, பேரூர்களில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து மே 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக  கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 


கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக நிதியமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழக அரசின் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதன்படி பயன்படுத்துகிற இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சாரவாரியம் கட்டாயம் வசூலிக்கவேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்திக்கொள்ளலாம். எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக்கூடாது என்பதே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 
 

தமிழகத்தில் 24 லட்சம் பம்ப் செட்டுகளுக்கும், 11 லட்சம் குடிசைகளுக்கும், 2.1 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துகிற முதல் 100 யூனிட்டுகளுக்கு வழங்கப்படுகிற கட்டணச் சலுகையும், 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிற இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை மத்திய அரசு செய்துவருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிறகுதான் நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு எந்த வகையிலும் மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை தடுக்கமுடியாது என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
 

தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் என்பது விவசாயிகளின் துன்பத்தை போக்குவதற்காக 1990 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டதாகும். காவிரி டெல்டா விவசாயிகள் நீர்ப்பாசனத்தை நீண்ட நெடுங்காலமாக இலவசமாக பெற்றுவருகிறார்கள். ஆனால் ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் மிகுந்த பொருட்செலவில் முதலில் கிணறுவெட்டி, பம்ப் செட் அமைத்து, மின்சார இணைப்பு பெற்று, பயன்படுத்துகிற மின்சாரத்திற்கு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்துவது விவசாயிகளிடையே சமநிலைத்  தன்மை இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வந்த இந்த அநீதியை கலைவதற்கே  கொண்டுவரப்பட்டது தான் இலவச மின்சாரம். அந்த வகையில் இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல, அது விவசாயிகளின் உரிமை. அதை பறிப்பதை விவசாயிகள் தங்களது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடி, தடுத்து நிறுத்துவார்கள். இதற்காக கடந்த காலத்தில் பல போராட்டங்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தி, பல உயிர்களை தியாகம் செய்திருக்கிறோம். விவசாயிகளின் பிணத்தின்மீது நடந்துசென்று தான் மோடி அரசால் இந்த சட்டத்தை அமுல்ப்படுத்த முடியுமே தவிர வேறுவகையில் முடியாது. தமிழக காங்கிரஸ் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கும். 
 

தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், குடிசை வாசிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து தமிழகத்தில் உள்ள  அனைத்து வட்டாரங்கள், நகரங்கள், பேரூர்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பாக 5 பேருக்கு மிகாமல்  கையில் கறுப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வருகிற மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை   நடத்தவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.