Skip to main content

பிரதமர் மோடியின் இயக்கம் பயங்கரவாத இயக்கமா? - கே.எஸ். அழகிரி தாக்கு

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

KS Alagiri criticized pm Modi

 

கடலூர் தெற்கு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகரக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல்களைக் கண்டித்து சிதம்பரம் வடக்கு வீதி தலைமைத் தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தில்லை ஆர். மக்கீன் வரவேற்றார். கடலூர் தெற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் என்.வி. செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் பிபிகே. சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.என். ராதா, மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், நகரச் செயல் தலைவர் தில்லை கோ. குமார், மகளிரணி தில்லை செல்வி, கோ. ஜனகம், மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பின்னர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக விடப்பட்ட விஷயம் உலக மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ஆனால் மோடியின் மனசாட்சியை மட்டும் உலுக்கவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திரெளபதியைக் கூட துகில் உரித்தார்களே ஒழிய, நிர்வாணமாக்கவில்லை. மோடி ஆட்சியில் நிர்வாணமாக்கப்பட்டதோடு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். பெண்ணினத்திற்கே ஏற்பட்ட கொடுமை.

 

இதைப் பற்றி மோடியை பேசச் சொன்னால், நான் ராஜஸ்தானை பற்றிப் பேசுவேன், சத்தீஸ்கரை பற்றிப் பேசுவேன் என்று வேறு சில மாநிலங்களின் பெயரைச் சொல்லுகிறார். முதலில் மணிப்பூரைப் பற்றிப் பேசுங்க என்றால் பேச மறுக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்திற்குப் பங்கெடுத்துக் கொண்டு பேசமாட்டாரா? நாடாளுமன்றத்தில் பேசுங்க, கண்டிக்கிறேன் என்று சொல்லுங்க. கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்வேன் என்று சொல்லுங்க. தூக்கிலிடுவேன் எனச் சொல்லுங்க. ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இன்றைக்கு இஸ்லாமியத் தலைவர்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது ஒரு பையன் நேருக்கு நேர் சுட்டுக்கொள்கிறான். பாதுகாப்பாகச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்கிறான். இதுதான் மோடி ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்களைக் கொண்டு மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்க வேண்டும் என்பதுதான். நியாயம் சொல்ல வேண்டிய இடம் மக்கள் மன்றம்தான். மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனிதநேயம் மிக்க அனைவருமே இதற்காகத் திரண்டு எழுந்துள்ளார்கள்.

 

மோடிக்கு எதிரான மிகப்பெரிய மன உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் புரிந்து கொண்டு அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்கக் கூடாது. குற்றத்திற்குத் துணை போகக் கூடாது. நியாயப்படுத்தக் கூடாது. அண்ணாமலையைப் பொறுத்தவரை நேர்மறை அரசியல் தெரியாது. எதிர்மறை அரசியல்தான் தெரியும். யாரோ அவரிடம் தவறாகச் சொல்லியுள்ளார்கள். ஏட்டிக்குப் போட்டி பேசினால் விளம்பரம் கிடைக்கும் எனச் சொல்லியுள்ளார்கள். நான் ஜனாதிபதியைச் சந்தித்து மோடி அரசில் 50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது எனச் சொல்லி மனு அளிக்கலாம். அது செய்தியாகலாம், அதில் என்ன உண்மை இருக்க முடியும். பாஜக தலைவர் கே. அண்ணாமலை, குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே செல்கிறாரே ஒழிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிகிறதா? எதுவும் இல்லை. இதுதான் அவரது அரசியல், அது நல்ல அரசியல் அல்ல.

 

இந்தியா பெயரில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டணி பயங்கரவாதக் கூட்டணி என்கிறார் மோடி. இந்தியா பெயரில் அதிகமான திட்டங்களை வைத்திருப்பவர் மோடிதான். மோடி அரசின் அனைத்துத் திட்டங்களுக்குப் பின்னால் இந்தியா என்ற வார்த்தை வரும். எனவே இந்தியாவை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அப்படியென்றால் அவரது இயக்கம், தீவிரவாத இயக்கமா? 

 

அதிமுக என்பது போலி முகம்தான். அதிமுகவிற்கு சமூகப் பிரச்சனையில் அக்கறை கிடையாது. அவர்களால் ஜெயலலிதா சொன்னது போன்று மோடியா? லேடியா? என்று சொல்லத் தைரியம் கிடையாது. அன்றைக்கே பாபர் மசூதி இடிப்பிற்குத் துணை போனவர்கள், அதனை ஆதரித்தவர்கள். ஒரு காலத்திலும் இன்றுள்ள அதிமுக என்பது இதற்காகப் போராடக்கூடிய இயக்கம் அல்ல. அவர்களது இயக்கம் சந்தர்ப்பவாத இயக்கம். எனவே அவர்கள் பாஜக பக்கம்தான் இருப்பார்கள். அவர்களிடம் கொள்கையை எதிர்பார்க்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.