Skip to main content

'அமைச்சர் பதவிகேட்டு கூட்டணிக்கு வந்துவிடாதீர்கள்'-கே.பி.முனுசாமியின் பேச்சு பாஜகவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியா?

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தலைமையும் அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது அதிமுக தலைமை.

 

அதிமுக தலைமை ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைமையோ பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக-பாஜக கூட்டணியை மேடையிலேயே உறுதிப்படுத்தியிருந்தனர்.  

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

அதனைத் தொடர்ந்தும் மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக பாஜக தலைமை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதேபோல் அண்மையில் சிவகங்கையில் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சிவகங்கையின் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கைகாட்டும் ஒருவருக்கு கொடுங்கள் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்குவோம், அமைச்சராக்குவோம் எனக் கூறியிருந்தார்.

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

இச்சூழலில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கடந்த 50 ஆண்டு காலமாக எந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் உள்ளே வரவிடாமல் திராவிட இயக்கம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்கின்றன சில அரசியல் கட்சிகள். சிலர் சொல்லுகிறார்கள் திராவிட இயக்க ஆட்சியிலே இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள் என்று. யார் சொல்வது, சில தேசியக் கட்சிகள் சொல்கிறது. சில சந்தர்ப்ப வாதிகள் சொல்கிறார்கள். உயர் நிலையிலிருந்து நீண்டகாலமாக, தந்தை பெரியார் காலத்திலிருந்தே இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்ற ஒரு சமூகம், ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு பொருளும் இல்லை தேவையும் இல்லை.

 

கூட்டணி அமைப்போம், கூட்டணி மந்திரிசபை அமைப்போம் என்று எந்த அரசியல் கட்சியாவது நம்மோடு கூட்டணி வந்தால் அவர்கள் தயவு செய்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்றார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

சிதம்பரத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது கே.பி.முனுசாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தந்த கட்சிகள் தங்களுடைய கட்சிக்கு பலம் அதிகமாகும், தொண்டர்கள் உற்சாகமாவார்கள் என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்வது வழக்கம். அந்த வழக்கித்தின் அடிப்படையில் பேசி இருந்தால் அதை குற்றம் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய கட்சியை பொறுத்த விஷயம் என்றார்.

 

அதிமுக தலைமை தேர்ந்தெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா அல்லது தமிழக பாஜக சொல்லும்படி பாஜக மேலிடம் கைகாட்டும் நபர்தான் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுக தலைமை அறிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர், அமைச்சர் பதவி கேட்டு கூட்டணிக்கு வந்து விடாதீர்கள் என்பதுபோல் கே.பி.முனுசாமி பேசியுள்ளது பாஜகவின் கூட்டணிக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.