Skip to main content

கிடைச்ச பதவிக்கு நீங்களே வேட்டு வச்சிடாதீங்க... கே.என்.நேருவின் அதிரடி அரசியல்... அப்செட்டில் டி.ஆர்.பாலு!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

தலைமைச் செயற்குழு கூட்டத்துக்கு முன்பாகவே தி.மு.க. முதன்மைச் செயலாளர் மாற்றத்திற்கான ஆலோசனை நடைபெற்றதை நக்கீரன் முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. அந்தப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலுவுடன் கூடுதலாக, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள கே.என்.நேருவையும் சேர்ந்து பணியாற்றச் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன. முதன்மைச் செயலாளர் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டாராம் பாலு. அவர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதால் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கே.என். நேரு நியமிக்கப்படுவதாக, முரசொலியில் முதல் பக்கத்தில் தலைமைக்கழக அறிக்கை வெளியாகியிருந்தது. தி.மு.க.வினரைப் பொறுத்தவரை பொதுப்பதவி எத்தனை இருந்தாலும் கட்சியில் என்ன பதவி என்பதுதான் முக்கியமானது. தற்போது கட்சிப் பதவி இல்லாததால் அப்செட்டாகியிருக்கும் டி.ஆர். பாலுவுக்கு வேறு என்ன பதவி தரலாம் என்ற ஆலோசனை நடக்கிறதாம்.

 

dmk



முன்னாள் அமைச்சர் நேரு தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 30 ஆண்டுகாலம் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து கட்சித் தலைமையின் மதிப்பைப் பெற்றவர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ஒட்டுமொத்தமாக தி.மு.க. வெற்றி பெற்றது. அதற்கானப் பரிசுதான் மாநிலப் பொறுப்பு. அதனால் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு போட்டி அதிகமாகியுள்ளது.

முதன்மைச் செயலாளரான நேரு, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது, "தற்போது போலவே திருச்சி மாவட்டம் இரண்டு அமைப்புகளாக இருக்கட்டும்' என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இடத்தில் முன்னாள் துணைமேயர் அன்பழகன் என்பதுதான் நேருவின் கணக்கு. அதே நேரத்தில், அன்பில்மகேஷும் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த நினைப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனை நியமிப்பது குறித்து தயக்கம் ஏற்படவே, முன்னாள் அரசு வழக்கறிஞரான பாஸ்கரன், வைரமணி பெயர்களை நேரு சிபாரிசு செய்தார். பாஸ்கரன் கட்சிக் காரரில்லை என்று அன்பழகன் தரப்பு அறிவாலயத்திற்கு புகார் அனுப்பியுள்ளது.


இதனிடையே, சென்னையிலிருந்து திருச்சி திரும்பிய நேருவுக்கு மாவட்ட எல்லையிலிருந்து பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சமயபுரம் அருகே அமர்க்களமான வரவேற்புடன் காத்திருந்தவர்களிடம், “கிடைச்ச பதவிக்கு நீங்களே வேட்டு வச்சிடாதீங்க' என தனக்கேயுரிய ஸ்டைலில் சொன்னார். அவர் அப்படிச் சொன்ன நிலையிலும், திருச்சி மாநகர தி.மு.க. இணையதள டீம் நேருவின் மகன் அருண், ராமஜெயம் மகன் வினித், உறவினர் வினோத் ஆகியோர் படங்களை பதிவு செய்து "நேருவின் அரசியல் வாரிசே வருக!' என புது வாரிசுகளை அறிமுகப்படுத்தியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-தாவீதுராஜ்
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.