Skip to main content

கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசம்! அ.தி.மு.க - தி.மு.க மாறி மாறி வெளிநடப்பு!  

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

Kiran Bedi - narayanasamy

 

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியது. 

 

இந்த நிலையில் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கரோனா கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கடுமையாகப் பேசியுள்ளார். அதன் காரணமாக கடந்த 2  நாட்களாகக் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், ஊழியர்கள் 2 நாட்களாக கிரண்பேடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் திங்கள்கிழமை சட்டப்பேரவை நிகழ்விலும் எதிரொலித்தது. 

 

puducherry assembly

 

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், 'மக்களின் உயிரைக் காக்கக்கூடிய கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைக் கண்ணியமாகப் பாராட்ட வேண்டிய நிலையில் அவர்களைக் கடுமையாக விமர்சித்தும், மிரட்டும் தொனியிலும் ஆளுநர் கிரண்பேடி பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரவையில் கண்டன தீர்மானம் இயற்ற வேண்டும் எனக் குரல் எழுப்பினர். 

 

இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், "தமிழ் அதிகாரிகளை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை. கடந்த 100 நாட்களாக ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வராத கிரண்பேடி பட்ஜெட் விவகாரத்தைத் திசைதிருப்ப ஆய்வு என்ற பெயரில் கரோனா பணியில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரிகளை மிரட்டியது கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் கரோனா அதிகரித்து வருகிறது. படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆளுநர் மாளிகையைக் கூட கரோனா வார்டாக மாற்றலாமா என்று நாங்கள் முயற்சிக்கிறோம். இதுகுறித்து அங்கு ஆய்வு செய்யவும் தயாராக இருக்கின்றோம்" என ஆவேசமாகப் பேசினார். 

 

puducherry assembly

 

இதற்குப் பதிலளித்த "முதலமைச்சர் நாராயணசாமி, உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும், ஆனால் அந்தக் கண்ணியத்தை நான் கிரண்பேடியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கரோனா பேரிடர் காலத்தில் ஆளுநர் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். 

 

http://onelink.to/nknapp

 

அதனையடுத்து ஆளுநர் மீது கண்டன தீர்மானம் எதுவும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை. இருந்த போதிலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, "உயிரைக்காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடக்கூடிய மருத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் மனம் புண்படும் வகையில் அவமரியாதையுடன் பேசிய வார்த்தைகளை ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறி பேரவையை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

இதனிடையே 'புதுச்சேரியில் தமிழக முன்னாள் ஜெயலலிதாவிற்குச் சிலை வைக்கக் கோரியதற்கு நடவடிக்கையில்லை. தி.மு.கவை மகிழ்ச்சிபடுத்த ராஜீவ் பெயரிலான திட்டத்தைக் கலைஞர் பெயருக்கு மாற்றி'யதாக புகார் கூறி அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் 'அ.தி.மு.க உறுப்பினர்கள் கலைஞரை அவமதித்து பேசியதைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்காத அமைச்சர்களைக் கண்டித்தும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.