Skip to main content

“மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் மண்ணெண்ணெய் பற்றாக்குறை” - அமைச்சர் சக்கரபாணி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

"Kerosene shortage due to central government control" Minister Chakrapani

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களை எல்லாம் வழங்கிக் கொண்டுள்ளார். மண்ணெண்ணெய் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் பருப்பு, ஆயில், சர்க்கரை போன்றவை வழங்குவது போல் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் மண்ணெண்ணெய் வழங்க முடியும். 

 

மண்ணெண்ணெய் மட்டுமல்ல. மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஜூலை 2020ல் மாதம் தோறும் 13 ஆயிரத்து 485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2020 மே முதல் 2022 வரை மாதம்  30 ஆயிரத்து 647 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஜூன் 2022 முதல் மாதம் 8 ஆயிரத்து 532 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, மாதம் தோறும் 15 ஆயிரம் டன் கோதுமை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசு கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைத்துள்ளார்கள். 

 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 376 நெல் அறவை ஆலைகளாக இருந்ததை 747 ஆலைகளாக உயர்த்தியுள்ளது. அனைத்து ஆலைகளிலும் தகுந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசியாக கொடுக்க முடிவு செய்து அந்த அரிசியும் குடோனுக்கு வரும் சமயத்தில் அதிகாரிகள் அதனை சோதனை செய்த பின்பே அதை வாங்க வேண்டும் அல்லது அதனைத் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

2020 - 2021ல் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2021- 2022 காலத்தில் 43 லட்சம் மெட்ரிக் டன், இந்தாண்டு தற்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முடிவதற்குள் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும்” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்