Skip to main content

பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா? நிர்மலா சீதாராமனுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

Published on 26/06/2020 | Edited on 27/06/2020
kasi muthu manickam dmk

 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பாரத நாட்டின் நிதி அமைச்சர் எங்கள் பெருமைக்குரிய மண்ணின் மகள் தமிழச்சி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கரோனா ஒழிப்பிற்கான ஒத்துழைப்பையோ, சீனாவின் எல்லை ஆசை வெறியையோ எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார். எமர்ஜென்சி கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் என்றும் பொங்கி உள்ளார்.

 

செட்டி கெட்டால் பட்டு வேட்டி என்பது போல பேச ஒன்றும் கிடைக்காமல் பழைய, பழைய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுக்காக அன்னை இந்திரா மன்னிப்பு கேட்ட பிறகுதான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக நீண்ட இழுப்புக்கு பின், மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பிறகுதானே, கடிதம் தந்தது, அதுகூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜக ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்ததே. 

 

இரும்பு மனிதர் அத்வானிஜியை செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர் என்று ஜெயலலிதா கூறினாரே. அதன்பின் எந்தக் கட்டத்திலாவது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதா அதிமுக. மன்னிப்பு கேட்காத சூழலில் எந்த அதிமுக வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுகவுடன் வாஜ்பாய்யே 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?

 

ஆனால் திமுக, அன்னை இந்திராவின் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்ல, தேசத்திற்காக அன்னை இந்திரா - தியாகி இராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். 

 

ஒன்றிரெண்டு பெற்றால்கூட ஆட்சி என அலையும் பாஜக, மாற்று கட்சி உறுப்பினரை தாவ வைத்து, இராஜினாமா செய்யச் செய்து ஆட்சியையும், இராஜ்யசாப உறுப்பினர்களையும் பெற்றிடும் பாஜக ஜனநாயகத்தை பேசுகிறது.

 

காஷ்மீரில் பரூக் அப்துல்லா போன்ற சிங்கங்களை கூண்டில் வைப்பதுபோல வீட்டில் சிறை வைத்து கொடுமை செய்து வரும் பாஜக ஜனநாயகம் பேசுகிறது. வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்திய அதிமுக ஆட்சியினை காப்பாற்ற, செல்லாத நோட்டை எல்லாம் குழுவில் சேர்த்து மோசடிக்கு உடந்தை போடும் பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா?

 

பெண்ணை மணக்காமல் மண்ணை மனந்த மகாராஜன்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் வீட்டிலே. 10 ஆண்டுகளுக்குள் பாஜகவுக்கு வந்த நீங்களும், ஸ்ருதி இராணியும் கேபினெட் அமைச்சர்கள். இதையே பாஜக தொண்டன் தாங்கும்போது, காங்கிரசினை திமுக தொண்டன் தாங்க மாட்டானா?

 

சித்தாந்தம் பேசுவதெல்லாம் எதிர்கட்சிகளுக்குதான் உங்களுக்கு இல்லை. அம்மா, உங்களுக்கு தெரியுமா? காவி - சிவப்புடன் (கம்னியூஸ்டுடன்) கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரியுமா? மெகபூபாவின் முஸ்லீம் லீக்குடன் பாஜக சேர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தது தெரியுமா?

 

பாலை காப்பதற்கு யாரை காவல் வைக்கலாம் என பால்காரனுக்கு தெரியும் - பூனை ஆலோசனை கூற வேண்டாம். எங்களை வழி நடத்திட, வாழ்வு தந்திட எங்கள் இளைய கலைஞர் தலைவர் தளபதிக்கு தெரியும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.