Skip to main content

பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா? நிர்மலா சீதாராமனுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

Published on 26/06/2020 | Edited on 27/06/2020
kasi muthu manickam dmk

 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பாரத நாட்டின் நிதி அமைச்சர் எங்கள் பெருமைக்குரிய மண்ணின் மகள் தமிழச்சி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கரோனா ஒழிப்பிற்கான ஒத்துழைப்பையோ, சீனாவின் எல்லை ஆசை வெறியையோ எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார். எமர்ஜென்சி கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் என்றும் பொங்கி உள்ளார்.

 

செட்டி கெட்டால் பட்டு வேட்டி என்பது போல பேச ஒன்றும் கிடைக்காமல் பழைய, பழைய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுக்காக அன்னை இந்திரா மன்னிப்பு கேட்ட பிறகுதான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக நீண்ட இழுப்புக்கு பின், மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பிறகுதானே, கடிதம் தந்தது, அதுகூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜக ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்ததே. 

 

இரும்பு மனிதர் அத்வானிஜியை செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர் என்று ஜெயலலிதா கூறினாரே. அதன்பின் எந்தக் கட்டத்திலாவது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதா அதிமுக. மன்னிப்பு கேட்காத சூழலில் எந்த அதிமுக வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுகவுடன் வாஜ்பாய்யே 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?

 

ஆனால் திமுக, அன்னை இந்திராவின் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்ல, தேசத்திற்காக அன்னை இந்திரா - தியாகி இராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். 

 

ஒன்றிரெண்டு பெற்றால்கூட ஆட்சி என அலையும் பாஜக, மாற்று கட்சி உறுப்பினரை தாவ வைத்து, இராஜினாமா செய்யச் செய்து ஆட்சியையும், இராஜ்யசாப உறுப்பினர்களையும் பெற்றிடும் பாஜக ஜனநாயகத்தை பேசுகிறது.

 

காஷ்மீரில் பரூக் அப்துல்லா போன்ற சிங்கங்களை கூண்டில் வைப்பதுபோல வீட்டில் சிறை வைத்து கொடுமை செய்து வரும் பாஜக ஜனநாயகம் பேசுகிறது. வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்திய அதிமுக ஆட்சியினை காப்பாற்ற, செல்லாத நோட்டை எல்லாம் குழுவில் சேர்த்து மோசடிக்கு உடந்தை போடும் பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா?

 

பெண்ணை மணக்காமல் மண்ணை மனந்த மகாராஜன்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் வீட்டிலே. 10 ஆண்டுகளுக்குள் பாஜகவுக்கு வந்த நீங்களும், ஸ்ருதி இராணியும் கேபினெட் அமைச்சர்கள். இதையே பாஜக தொண்டன் தாங்கும்போது, காங்கிரசினை திமுக தொண்டன் தாங்க மாட்டானா?

 

சித்தாந்தம் பேசுவதெல்லாம் எதிர்கட்சிகளுக்குதான் உங்களுக்கு இல்லை. அம்மா, உங்களுக்கு தெரியுமா? காவி - சிவப்புடன் (கம்னியூஸ்டுடன்) கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரியுமா? மெகபூபாவின் முஸ்லீம் லீக்குடன் பாஜக சேர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தது தெரியுமா?

 

பாலை காப்பதற்கு யாரை காவல் வைக்கலாம் என பால்காரனுக்கு தெரியும் - பூனை ஆலோசனை கூற வேண்டாம். எங்களை வழி நடத்திட, வாழ்வு தந்திட எங்கள் இளைய கலைஞர் தலைவர் தளபதிக்கு தெரியும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார். 

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.