Skip to main content

பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா? நிர்மலா சீதாராமனுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

Published on 26/06/2020 | Edited on 27/06/2020
kasi muthu manickam dmk

 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பாரத நாட்டின் நிதி அமைச்சர் எங்கள் பெருமைக்குரிய மண்ணின் மகள் தமிழச்சி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கரோனா ஒழிப்பிற்கான ஒத்துழைப்பையோ, சீனாவின் எல்லை ஆசை வெறியையோ எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார். எமர்ஜென்சி கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் என்றும் பொங்கி உள்ளார்.

 

செட்டி கெட்டால் பட்டு வேட்டி என்பது போல பேச ஒன்றும் கிடைக்காமல் பழைய, பழைய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுக்காக அன்னை இந்திரா மன்னிப்பு கேட்ட பிறகுதான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக நீண்ட இழுப்புக்கு பின், மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பிறகுதானே, கடிதம் தந்தது, அதுகூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜக ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்ததே. 

 

இரும்பு மனிதர் அத்வானிஜியை செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர் என்று ஜெயலலிதா கூறினாரே. அதன்பின் எந்தக் கட்டத்திலாவது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதா அதிமுக. மன்னிப்பு கேட்காத சூழலில் எந்த அதிமுக வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுகவுடன் வாஜ்பாய்யே 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?

 

ஆனால் திமுக, அன்னை இந்திராவின் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்ல, தேசத்திற்காக அன்னை இந்திரா - தியாகி இராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். 

 

ஒன்றிரெண்டு பெற்றால்கூட ஆட்சி என அலையும் பாஜக, மாற்று கட்சி உறுப்பினரை தாவ வைத்து, இராஜினாமா செய்யச் செய்து ஆட்சியையும், இராஜ்யசாப உறுப்பினர்களையும் பெற்றிடும் பாஜக ஜனநாயகத்தை பேசுகிறது.

 

காஷ்மீரில் பரூக் அப்துல்லா போன்ற சிங்கங்களை கூண்டில் வைப்பதுபோல வீட்டில் சிறை வைத்து கொடுமை செய்து வரும் பாஜக ஜனநாயகம் பேசுகிறது. வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்திய அதிமுக ஆட்சியினை காப்பாற்ற, செல்லாத நோட்டை எல்லாம் குழுவில் சேர்த்து மோசடிக்கு உடந்தை போடும் பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா?

 

பெண்ணை மணக்காமல் மண்ணை மனந்த மகாராஜன்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் வீட்டிலே. 10 ஆண்டுகளுக்குள் பாஜகவுக்கு வந்த நீங்களும், ஸ்ருதி இராணியும் கேபினெட் அமைச்சர்கள். இதையே பாஜக தொண்டன் தாங்கும்போது, காங்கிரசினை திமுக தொண்டன் தாங்க மாட்டானா?

 

சித்தாந்தம் பேசுவதெல்லாம் எதிர்கட்சிகளுக்குதான் உங்களுக்கு இல்லை. அம்மா, உங்களுக்கு தெரியுமா? காவி - சிவப்புடன் (கம்னியூஸ்டுடன்) கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரியுமா? மெகபூபாவின் முஸ்லீம் லீக்குடன் பாஜக சேர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தது தெரியுமா?

 

பாலை காப்பதற்கு யாரை காவல் வைக்கலாம் என பால்காரனுக்கு தெரியும் - பூனை ஆலோசனை கூற வேண்டாம். எங்களை வழி நடத்திட, வாழ்வு தந்திட எங்கள் இளைய கலைஞர் தலைவர் தளபதிக்கு தெரியும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்