Skip to main content

கருநாடக இடைத்தேர்தல் முடிவு - பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி! கி.வீரமணி 

Published on 08/11/2018 | Edited on 08/11/2018



 

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு ஏற்பட்ட படுதோல்வி - எதிர்காலத்தில் அது முற்றிலும் தோல்வி அடையும் என்பதற்கான அறிகுறி என்றும், எல்லா வகையிலும் தோல்வி காணும் மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட - மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 அண்மையில்  கருநாடக  மாநிலத்தில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரசு - ம.ஜ.த. கட்சி கூட்டணி 4 இடங்களில் பெருவெற்றி பெற்றுள்ளது.
 

ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில்கூட ஏற்கெனவே எடியூரப்பா (2014 இல்) 3 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது - அங்கும் சரிவுதான்!
 

இப்போது அவரது மகன் இராகவேந்திரா என்பவர் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதே தொகுதியில் - கடும் முயற்சிக்குப் பின்னரும் - வெற்றி பெற்றிருக்கிறார் என்பது, கருநாடகத்தில் பா.ஜ.க.விற்கு தோல்வி முகம் தொடருகிறது என்பதையே காட்டுகிறது!
 

கருநாடகாவில் தோல்விப் படலம்!
 

பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. 2004 முதல் வெற்றி பெற்ற ஒரு தொகுதி - 14  ஆண்டுகளாக அதன் வசம் இருந்த தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா வெற்றி பெற்றிருக்கிறார் - அதுவும் 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்!
 

மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. வெற்றி என்பதுதான் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அதற்குக் கிடைத்த ஆறுதல் பரிசு ஆகும்!


பெல்லாரி தொகுதியை எப்படியும் இம்முறை பா.ஜ.க. தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்று  படாதபாடு பட்டது அக்கட்சி!
 

அங்கு செல்வாக்குள்ள மனிதராகக் கருதப்படும் பி.சிறீராமுலு போன்றவர்களே கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டார்கள்.
 

எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை!


தென்மாநிலங்களைக் குறி வைக்க பா.ஜ.க. - மோடி - அமித்ஷா பல தனிக் குழுக்களை ஆதித்ய பிர்லா - அம்பானி போன்ற பல கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அறிவு ஜீவிகள் குழு - குறிப்பாக கேரளாவிலிருந்து கருநாடகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியின் நெருக்கக் குழுவில் ஒருவராக உள்ள எம்.பி.,  போன்றவர்களிடம் தனிப் பொறுப்பே கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் ஊடகங்களில் பேச்சுகள் கசிந்துள்ளன.
 

ஆந்திரா - தெலங்கானாவில் நிலைமை என்ன?
 

ஆந்திராவில், பா.ஜ.க. இனி எளிதில் பழைய செல்வாக்கைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது.


தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசமும், காங்கிரசும்  இணைந்து கூட்டணியாக இணைந்து சந்திரசேகர ராவையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதால் - இரண்டு கட்சிகளுக்கும் (தெலங்கானா  டி.ஆர்.எஸ். ஆளுங்கட்சி - பா.ஜ.க. இருவருக்கும்) வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
 

கேரளாவில் மதவெறி ஆயுதம்!
 

கேரளாவில் - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்திக் கடமையாற்றும் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மத உணர்வை விசிறிவிட்டு, குளிர்காய நினைத்து திட்டமிட்டே பா.ஜ.க. அங்கு மதக்கலவரங்களுக்குத் தூபம் போட ஏற்பாடு ஆன விஷயம் அங்குள்ள பா.ஜ.க. தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி - அம்பலமாகி விட்டது!


‘கடல் வற்றிக் கருவாடு தின்னக் காத்திருந்த (பா.ஜ.க.) கொக்கு குடல்வற்றி செத்த’ பழைய உவமையை நினைவூட்டுவதாக உள்ளது பரிதாபத்திற்குரிய பா.ஜ.க. நிலை!
 

தமிழ்நாட்டின் நிலைமை!
 

தமிழ்நாட்டில் தூண்டிலைத் தூக்கி அலைகிறார்கள் - திரைப்பட நடிகர்களின் அரசியல் கட்சி - ஒரு கட்சி கருவிலேயே இருக்கிறது! எப்போது பிறக்கும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியாத புதிராக இருக்கும்போது, அதனைத் தூக்கிக் கொஞ்சி மகிழுவதுபோல, காட்டி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார்கள். - குழந்தை கழுத்தில் உள்ள செயினைக்கூட கவரத் துடிப்பவர்களைப்போல, அரசியல் புரோக்கர்கள்மூலம் செய்த முயற்சிகள் வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையை வாட்டி வதைக்கிறது!


தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டு என்றாலோ ஓட்டம் பிடிப்பவர்களாகவே அத்துணைக் கட்சிகளும் உள்ளன! வேண்டுமானால், சில கூலிப் படைக் கட்சிகள் அகப்படக்கூடும்! காரணம், இங்குள்ள பெரிய கட்சிகளோடு போட்டியிடும் நிலையில் இல்லை.  தமிழ்நாட்டில் என்னதான் ஊடகங்களால் ஊதிப் பெருக்கம் நடைபெற்ற போதிலும்கூட - பா.ஜ.க. போட்டிப் போடுவது  ‘‘நோட்டா’’ வுடன் மட்டுமே!
 

இது பெரியார் மண்தான்! திராவிட பூமிதான்  என்பதை மாற்றிட எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும் நடக்காது - பிழைக்காது.
 

என்றாலும், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் குறிப்பாக மதச்சார்பின்மை சமூகநீதியில் நம்பிக்கையுள்ள கட்சிகள், மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று உண்மையிலேயே கருதுபவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தன்முனைப்புக்கு இடம் தராமல், பொதுநோக்கம் நிறைவேறிட, பொது எதிரியை வீழ்த்திடுவது முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்வது மிகவும் அவசர அவசியம்!
 

பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி - சிக்கல்!
 

கருநாடக இடைத்தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை மணி பா.ஜ.க.விற்கு!
 

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவுக்குப்பின் பொருளாதாரம் மட்டுமல்ல அதைக் காப்பாற்ற வேண்டிய, ஒழுங்குபடுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகளும்கூட பா.ஜ.க., மோடி அரசின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்ப முடியவில்லை.

k.veeramani



விண்ணை முட்டும் விலைவாசி, உச்சமான வேலையில்லாத் திண்டாட்டம் (69 சதவிகிமாக கடந்த 2 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது என்று இந்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது) - பெட்ரோல், டீசல் விலைகளின் விலையேற்றங்கள் - விவசாயிகளின் தற்கொலை; பல்லாயிரக்கணக்கில் கல்வித் துறையில் காவி மயம் - இப்படி எல்லாவற்றிலும், எல்லா தரப்பு மக்களின் ஏமாற்றத்திற்கும் ஆளாகி, எதிர்ப்பையும், அதிருப்தியையும் சந்திக்கிறது மோடி அரசு!


மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என்பதைப்  புரிந்துகொள்ளாமல், ‘மகுடி வாசிப்பது’ பயன்படாது!

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.