Skip to main content

காமராஜர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றி போற்றுவோம்! -மு.க.ஸ்டாலின்

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
mk stalin

 

கலைஞர் காட்டிய வழியில் ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து, காமராஜர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றி போற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:-

 

“ஜூலை 15 - உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்த தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு  சிறப்பு உண்டு. ஆம்.. கல்வி வளர்ச்சி நாளாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாகும். தமிழக அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதல்வராக, 9 ஆண்டுகாலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் தந்த 'K - Plan' துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம். திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் சமூக - அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி,மாறி வைக்கப்பட்டபோதும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் ‘பச்சைத்தமிழர்’ என்று அழைத்தார், பேரறிஞர் அண்ணா அவர்களோ, “குணாளா.. குலக்கொழுந்தே..” என்றே கொண்டாடி எழுதினார்.  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது சட்டமன்ற அனுபவங்கள் குறித்த பேட்டியில், தமிழகத்தின் ‘சிறப்பான முதல்வர்’ என்று காமராஜரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும், காமராஜர் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜரும் அத்தகைய அரசியல் பண்பாட்டினைக் கடைபிடித்தார். 

 

சமூகநீதியின் தாய்மடியாக விளங்கும் தமிழகத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘கம்யூனல் ஜி.ஓ.' எனப்படும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறைக்கு, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று குடியரசு நாடான இந்தியாவில் ஆபத்து ஏற்பட்டபோது, இடஒதுக்கீட்டினைக் காப்பதற்காக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறப்போராட்டத்தை நடத்தினர். எழுச்சிமிகுந்த இந்த போராட்டத்தின் தன்மையையும் தாக்கத்தையும் உணர்ந்திருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதனால், அன்றைய பிரதமர் பண்டித நேரு அவர்களிடம், தமிழகத்தின் நிலையையும், திராவிட இயக்க தலைவர்கள் நடத்திய  போராட்டத்தின் தீவிரத்தையும் எடுத்துக்கூறினார். அதன் விளைவாக, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு முறை காப்பாற்றப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலவராக இருந்து, திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை நிலை பெற்றிடத் துணை புரிந்தவர் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவரான காமராஜர்.

 

சென்னை மாநகராட்சிக்கு 1959-ல் நடைபெற்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தால்,  தி.மு.கழகம் முதன்முறையாக வெற்றி பெற்று மாநகராட்சி நிர்வாகத்தை மேற்கொண்டது. அப்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கட்டளைப்படி, மாநகராட்சியின் சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது.

 

அரசியல் களத்தில் எதிர்துருவங்களாக இருந்தபோதும், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்கிற அரசியல் பண்பாட்டினைப் போற்றுவதில் முன்னோடியாக இருந்ததற்கு இப்படி எத்தனையோ சான்றுகள் உண்டு.

 

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில், 1968-ம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது, அதன் தொடக்கவிழாவில் பங்கேற்று சிறப்பிக்கும் வாய்ப்பை பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வழங்கினார் பேரறிஞர் அண்ணா.

 

பேரறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அவரது உயிரைக் காக்கும் எத்தகைய சிகிச்சையையும் மேற்கொள்வதற்கேற்ப வெளிநாட்டுப் பயணத்திற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பை பெறுவதில் பெருந்தலைவர் அவர்கள் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தினார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிர்ப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த  1969 பிப்ரவரி 2 இரவில் தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக அமைச்சர்களுடன் கண்விழித்துக் காத்திருந்தவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை ஈன்ற அன்புத்தாயாரும், என் பாசத்திற்குரிய பாட்டியாருமான அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் மறைந்தபோது, அரசியல் பணி காரணமாக தலைவர் கலைஞர் அவர்கள் வருவதற்கு நேரமானது. அவருக்கு முன்னதாக தலைவரின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, அஞ்சுகம் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்திற்கான பணிகளையும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் பெருந்தலைவர்.

 

தேர்தல் கள அரசியலைக் கடந்து, திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், பெருந்தலைவருக்கும் இருந்த நட்புறவை விளக்க இப்படி  நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு!

 

1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் நாள் அன்றைய பிரதமர்  அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு நாட்டின் ஜனநாயகம் காக்கும் அறப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. நாடு முழுவதும் ஸ்தாபன காங்கிரசின் மூத்த தலைவர்கள் - சோஷலிஸ்ட் கட்சியின் முன்னோடிகள், இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரசை கட்டிக்காத்து, இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் வழிகாட்டியாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு அரணாக இருந்தது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு.

 

நெருக்கடி கால இந்தியாவில் ஜனநாயகம் உயிருடன் இருக்கும் ஒரே மாநிலமாக தலைவர் கலைஞர் ஆட்சி செய்த தமிழகம் இருப்பதை சுட்டிக்காட்டிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உயிர், 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் தனது அரசியல் - வாழ்வியல் தலைவரான உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்தாளில் பிரிந்தது. அப்போது முதல்வராக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், காந்தியடிகளின் பிறந்தநாளில் மறைந்த பெருந்தலைவர் அவர்களின் உடலை கிண்டி - காந்தி மண்டபம் அருகிலேயே தகனம் செய்து, நினைவிடம் அமைத்திட வழிசெய்தார்.

 

பெருந்தலைவருக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் முட்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அதனை விரைவாக சீர்படுத்துவதற்காக கொட்டும் மழையையும், இருளையும் பொருட்படுத்தாமல், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, தனது ‘கார் ஹெட்லைட்டை’ ஒளிரச் செய்து, சீர்படுத்தும் பணிகளை நேரில் நின்று மேற்கொள்ளச்  செய்தவர் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்.

 

கிண்டி, காந்தி மண்டபம் அருகே பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு, அவருக்காக நினைவிடம் அமைக்கப்பட்டபோது, அதன் முகப்பில் அவரது ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சின்னமான இராட்டை சின்னத்தை பொறித்து பெருமை சேர்த்தவர் தலைவர் கலைஞர் அவர்களாவார்கள். விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தையும் நினைவுச் சின்னமாக மாற்றி அமைத்தார் கலைஞர். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைவதற்கு 40 நாட்களுக்குமுன் நடைபெற்ற என்னுடைய திருமண விழாவில் உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், அவர் வருவதற்கென்றே அமைக்கப்பட்ட தனிவழியில் மணமேடைக்கு வந்து, அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரி, மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் இணைந்து, வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அந்த நிகழ்ச்சி இன்றும் எனது கண்களின் நினைவுகளில் நின்று  நிலைத்திருக்கிறது.

 

பெருந்தலைவர் வாழ்ந்த போதும்; அவர் வரலாறாக ஆனபோதும் அவர் மீதான மரியாதையை பல  வகைகளிலும் வெளிப்படுத்தியவர் கலைஞர். நெருக்கடி நிலையை எதிர்த்து - பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்திய கலைஞர், தனது ஆட்சியையே 1976-ல் விலையாக கொடுத்தார்.

 

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படம் திறக்கப்பட்ட வேளையில், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் அவர்களைத் தனது அறைக்கு தனியாக அழைத்து, பெருந்தலைவரின் படத்திற்கு கீழே எழுதுவதற்கு பொருத்தமான  வாசகத்தை கேட்ட நிலையில், ‘உழைப்பே உயர்வு தரும்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதி கொடுத்து, கர்மயோகி காமராஜருக்கு பெருமை சேர்த்தார்.

 

13 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு, 1989-ல் தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக தலைவர் கலைஞர் பொறுப்பேற்று, ஆட்சி செய்தபோது, இந்தியாவின் பிரதமரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது, அந்த மேடையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும், விழா மேடையிலேயே அதனை ஏற்று, பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அண்ணா - காமராஜர் ஆகியோரின்  புகழ் பெயர்களைச் சூட்டியதையும் மறக்க முடியுமா?

 

கழகம் ஆட்சி அமைத்த காலங்களில் எல்லாம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புகளைச் செய்தபடியே இருந்தார். 2006-2011 தி.மு.கழக ஆட்சிக்காலத்தில், ஐந்தாம் முறை தமிழக முதல்வராக ஆட்சி செய்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளினை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் கல்வி வளர்ச்சி நாளாக எல்லாக் காலங்களிலும்  கொண்டாட வேண்டும் என்பதற்காக சட்டமியற்றி, அதனை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்க செய்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

கல்விக் கண் திறந்த கர்மவீரர் - தமிழகத்தின் வளர்ச்சிக்கான  திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்வர் - அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர் - திராவிட இயக்க தலைவர்களின் மாறா அன்புக்கு பாத்திரமானவர் - தலைவர் கலைஞர் அவர்களின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. நம் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை  இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றி போற்றுவோம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.